தமிழகத்தின் பல இடங்களில் திடீர் மழை... 6 பேர் உயிரிழப்பு

கத்தரி வெயில் முடிவடைந்த பிறகும், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று திடீரென தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த திடீர் மழை சில இடங்களில் கனமாகவும், சில இடங்களில் தூறலாகவும் பெய்தது. இந்தத் திடீர் மழை பூமியை சிறிது நனைத்துள்ள போதும், இதுவரை மழைக்கு 6 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாரல் மழை...
சென்னை வடபழனி, கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கள், விமான நிலையம், பல்லாவரம் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு குளிர்ந்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது.
மதுரையில் கனமழை....
மதுரையில் பலத்தக் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பேருந்து மீது மரம் விழுந்ததில் சிறுமி ஒருவர் பரிதாபமாகப் பலியானார்.
மின்னல் தாக்கியது...
அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் மின்னல் தாக்கி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். சாரணப்பட்டி அருகே மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இதேபோன்று, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மின்னல் தாக்கியதில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பலியானார்.
கூரை இடிந்து விபத்து...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் மரங்கள் சாய்ந்து விழுந்தன. கூசாலிபட்டி பகுதியில் பலத்த காற்று வீசியதில் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
ஜார்க்கண்ட் சிறுமி....
வேலூரில் கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள கழிவுநீர் கால்வாயில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்தார். மழை நீரால் அடித்துச் செல்லப் பட்ட அச்சிறுமி பலியாகி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரவலாக மழை...
மேலும், திருச்சி, விருதாச்சலம், காரைக்குடி, கொடைக்கானல், கிருஷ்ணகிரி, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications