வடமாவட்டங்களில் இன்னும் சில நாட்கள் மழை கொட்டித் தீர்க்குமாம்- சொல்கிறது சென்னை வானிலை மையம்
சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது.

இதனால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை தீவிரம் அடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு கிழக்கு, தென் கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டி தீர்த்தது.
இதனிடையில், தமிழகத்தை மிரட்டிவந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கரையை கடந்து வலுவிழந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மண்டலம் நேற்று தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநனர் ரமணன், "வேலூருக்கு தென்கிழக்கே சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதியை கடந்து செல்லும்.
இதன் விளைவாக, அடுத்த 24 மணி நேரம் வரை தமிழகத்தின் பெரும்பாலான வட மாவட்டங்களில் அதிகமான மற்றும் மிக அதிகமான மழை பெய்யும். தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்யும்.சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications