தமிழகத்தில் நாளை துவரம்பருப்பு சிறப்பு விற்பனை - அரசு சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு “நோ லீவ்”!
சென்னை: தமிழகத்தில் நாளை துவரம்பருப்பு சிறப்பு விற்பனை நடத்தப்பட இருப்பதால் அரசு பல்பொருள் அங்காடிகளுக்கு விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1 ஆம் தேதியான நாளை கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தினால் நடத்தப்படும் பல்பொருள் விற்பனை அங்காடிகளுக்கு விடுமுறை அளிக்காமல் துவரம் பருப்பு விற்பனை நடத்தப்படும்.
இந்தியா முழுவதும் திடீரென்று துவரம் பருப்பின் விலை பெருமளவில் உயர்ந்ததைத் தொடர்ந்து மக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். இந்த சிரமத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது.

500 மெட்ரிக் டன் துவரை:
அதன்படி, மத்திய அரசிடம் இருந்து முதல் கட்டமாக 500 மெட்ரிக் டன் துவரையை தமிழக அரசு கோரியது. இந்தத் துவரை பெறப்பட்டு, அதை துவரம் பருப்பாக மாற்றும் நடவடிக்கைகள் நடத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ளன.

இரண்டு வகை பாக்கெட்டுகளில் கிடைக்கும்:
ஒரு கிலோ மற்றும் அரை கிலோ என்று இரண்டு வகை பாக்கெட்டுகளாக துவரம் பருப்பு அடைக்கப்படுகின்றன. அரை கிலோ துவரம் பருப்பு ரூபாய் 55 என்றும், ஒரு கிலோ ரூபாய் 110 என்று நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து விற்பனை செய்யப்படவுள்ளது.

91 அங்காடிகளில் விற்பனை:
கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தினால் சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் 91 அங்காடிகளில் விற்பனை செய்யப்படவுள்ளன.

விடுமுறை நாளை இல்லை:
சிந்தாமணி, அமுதம் போன்ற கூட்டுறவு சங்க அங்காடிகள் 71 எண்ணிக்கையிலும், டி.யு.சி.எஸ். அங்காடிகள் 20 எண்ணிக்கையிலும் உள்ளன. கூட்டுறவு சங்க அங்காடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. டி.யு.சி.எஸ். அங்காடிகள் முதல் இரண்டு வார ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும்.

சிறப்பு விற்பனை நாளை தொடக்கம்:
துவரம் பருப்பு சிறப்பு விற்பனை தொடக்கம் நவம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் நிகழ்வதால் அன்று கூட்டுறவுத் துறை நடத்தும் அங்காடிகளுக்கு விடுமுறை கிடையாது என்று கூட்டுறவுத் துறை உயர் அதிகாரி தெரிவித்தார். எனவே 91 கடைகளிலும் மக்கள் தங்குதடையில்லாமல் நவம்பர் 1 ஆம் தேதியன்றே சென்று துவரம் பருப்பை குறைந்த விலையில் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications