உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்திற்கு முதலிடம்: 418 பேர் உடல் உறுப்பு தானம்
சென்னை: உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் மாநிலமாக உள்ளது.
நம் நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 533 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் தமிழகத்தில் 67, 757 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் சிக்கி தமிழகத்தில் மட்டும் 16,175 பேர் பலியாகியுள்ளனர். சாலை விபத்துகளில் இறப்போரின் சதவிகிதம் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகம்.
அவ்வாறு இறப்பவர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகின்றன.

மூளைச்சாவு உடல் மாற்று சிகிச்சை திட்டம்
சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைபவர்களின் இதயம், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக பெற்று தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக தமிழகத்தில் மூளைச்சாவு உடல் மாற்று சிகிச்சை திட்டத்தை கடந்த 2008ம் ஆண்டில் மாநில அரசு அறிமுகப்படுத்தியது.

எத்தனை உறுப்புகள்?
மூளைச்சாவு உடல் மாற்று சிகிச்சை திட்டத்தின் கீழ் இதுவரை 418 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. இதுவரை 768 சிறுநீரகங்கள், 640 கண்கள், 380 கல்லீரல், 66 இதயம், 28 நுரையீரல்கள், 452 இதய வால்வுகள், ஒருவரின் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும்
சென்னையில் மட்டும் 348 பேரிடம் இருந்து 611 சிறுநீரகங்கள், 378 கல்லீரல்கள், 66 இதயங்கள், 28 நுரையீரல்கள் தானமாக பெறப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 75 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 113 சிறுநீரகங்ள் மற்றும் 4 இதயங்கள் தானமாக பெறப்பட்டுள்ளன. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும் 18 பேர் உடல் உறுப்புகளை தானமாக கொடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து 40 கல்லீரல்கள் மற்றும் 15 சிறுநீரகங்கள் பெறப்பட்டுள்ளன.

முதலிடத்தில் தமிழகம்
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமானோர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர் என்று கீழ்ப்பாக்கம் மருத்துவத்துறை இயக்குனரகத்தின் இயக்குனரும், (பொறுப்பு) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீனுமான டாக்டர் வே. கனகசபை தெரிவித்தார். தமிழகத்தை அடுத்து மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகமாக உடல் உறுப்பு தானம் செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications