3 தமிழர் தூக்கை ரத்து செய்ய 64% பேர் ஆதரவு- ஜூ.வி. கருத்து கணிப்பு
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் 3 தமிழர் தூக்கை ரத்து செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியானதுதான் என்று 64% தமிழர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மூன்று தமிழர் தூக்கு ரத்து, 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு குறித்து ஜூனியர் விகடன் வாரம் இருமுறை ஏடு கருத்து கணிப்பு நடத்தியது.
இந்த கருத்து கணிப்பில் 3 தமிழரின் தூக்கை ரத்து செய்ததையும் தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்யும் முடிவையும் பெரும்பாலானோர் ஆதரித்துள்ளனர்.
தூக்கே வேண்டாம்..
பொதுவாக தூக்கு தண்டனையே தேவையில்லை ரத்து செய்யலாம் என 34.57% பேர் கூறியுள்ளனர். 24.51% பேர் தூக்கு அவசியம் என்று சொல்லியுள்ளனர்.
மூவர் தூக்கு ரத்துக்கு ஆதரவு
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை வரவேற்கிறேன் என்று 64.01% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 35.99% பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
7 தமிழர் விடுதலை..
ராஜிவ் வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு சரி என 36.75% பேர் கூறியுள்ளனர். 22.11% பேர் தவறான நடவடிக்கை என்று கூறியுள்ளனர்.
தேர்தல் ஸ்டண்ட்
7 தமிழரை விடுதலை செய்யும் ஜெயலலிதாவின் முடிவு ஒரு தேர்தல் ஸ்டண்ட் என 36.19% பேர் கூறியுள்ளனர். உணர்வுப்பூர்வமானது என 23.05% பேர் தெரிவித்துள்ளனர்.
ஜெ. நிலைப்பாடு
ஈழப் பிரச்சனையில் ஜெயலலிதா நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் என 39.15% பேரும் இல்லை என 60.85% பேரும் கூறியுள்ளனர்.
வாக்காகுமா?
7 பேர் விடுதலை லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு வாக்குகளை அள்ளித் தரும் என 30.52% பேரும், எந்த பலனையும் தராது என 31.54% பேரும் தெரிவித்துள்ளனர்.
மதிமுகதான் உறுதி..
ஈழப் பிரச்சனையில் உறுதியாக இருக்கும் கட்சி மதிமுக என 36.13% பேர் கூறியுள்ளனர். அதற்கு அடுத்து திமுகதான் உறுதியான கட்சி என 14.36%, அதிமுகதான் என 14.64% பேர் தெரிவித்துள்ளனர்.