நம்பிக்கை வாக்கெடுப்பு வீடியோ பதிவை ஸ்டாலினுக்கு தர ஹைகோர்ட் உத்தரவு
நம்பிக்கை வாக்கெடுப்பு நாளில் சட்டசபையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிப்பதிவு சிடியை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு அளிக்க பேரவை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகளை மு.க.ஸ்டாலினுக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டசபையில் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இதை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் சபாநாயகர் தனபால் இதை நிராகரித்துவிட்டார். இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள்ளேயே போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்களை சட்டசபை மார்ஷல் சீருடையில் வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் கே. பாலு, டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் நம்பிக்கை வாக்கெடுப்பு முறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த வாரம் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.
அப்போது, சட்டசபை சம்பவங்கள் தொடர்பான வீடியோ காட்சிகளைத் தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனால் வீடியோ காட்சிகளைத் தரக்கோரி சட்டசபை செயலருக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார்.
உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயர் தனபால், ஆளுநரின் செயலர், தலைமைச் செயலர், சட்டசபை செயலர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
ஜமாலுதீன் பதில்
இதற்கு தமிழக சட்டசபைச் செயலர் ஜமாலுதீன் இன்று பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில், தமிழக சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு வழிசெய்யும் விதி எதுவும் பேரவை விதிகளில் இல்லை எனவும் சட்டசபையில் அமளியில் ஏற்படுத்திய எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சி தலைவரை தடுத்து நிறுத்தியது குறித்து விசாரணை நடத்த உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ள அவர், சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதால் தான் திமுகவினர் வெளியேற்றப்பட்டனர் என்றார்.
சிடி தர உத்தரவு
பேரவைத் தலைவரின் பதில் மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், இது தொடர்பாக திமுக விளக்கமளிக்க வேண்டும் என்றும் இதற்காக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகளை மு.க.ஸ்டாலினுக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு ஒத்திவைப்பு
பேரவைச் செயலாளர் திமுகவினர் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து விளக்கம் தர வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.மேலும் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்க்கும் வழக்கு மார்ச் 21ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. திங்கட்கிழமையன்று வீடியோ பதிவை தருவதாக பேரவை செயலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.