ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால், போராட்டக் களத்தில் குதிப்பேன்: ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், நானே போராட்டத்தில் குதிப்பேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் இதுபற்றி கூறியுள்ளதாவது: தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. இந்த மண்ணின் மைந்தர்களின் உணர்வையும் பெருமைகளையும் வெளிப்படுத்தும் விளையாட்டு. அப்படிப்பட்ட வீர விளையாட்டிற்கு ஆபத்து வந்த போது அதற்கென்று, "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டம் 2009" என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, அதில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தியதுதான் கழக அரசு.

ஆனால் 2011ல் அதிமுக அரசு அமைந்ததும், பல திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியது போல் தமிழர்களின் இந்த பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுவிற்கும் தடங்கலை ஏற்படுத்தியது அதிமுக அரசு. இதை ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமே 7.5.2014 அன்று வழங்கிய தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தீர்ப்பினை அளித்த உச்சநீதிமன்ற நீதியரசர் ராதாகிருஷ்ணன் அவர்கள், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி பாதுகாப்புடன் நடக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய தேசிய விலங்கு வாரிய அதிகாரிகள் இருவரை அனுப்பினோம். டாக்டர் மணிலால் வல்லியேட், அபிசேக் ராஜே ஆகியோர் அடங்கிய குழுவினர் 14.1.2013 அன்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டையும், 15.1.2013 அன்று பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டையும்,16.1.2013 அன்று அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டையும் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்தார்கள்.
அந்த அறிக்கையை படித்துப் பார்த்தோம். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சட்டப்படி உருவாக்கப்பட்ட பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்காமல் ஜல்லிக்கட்டை அந்த மாவட்ட ஆட்சித் தலைவரும், போலீஸ் அதிகாரிகளும் நடத்தியுள்ளார்கள் என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் அன்றைய தினம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்படுகளுடன் விளையாட்டு நடக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வந்த போது அதிமுக அரசுதான் இருந்தது. அந்த அரசுதான் இப்போதும் இருக்கிறது.
தி.மு.க. அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சட்டப்படி அதிமுக ஆட்சியில் இந்த விளையாட்டை நடத்தியிருந்தால் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்காது. ஆனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடுக்க வேண்டும் என்ற தீயநோக்கத்துடன் செயல்பட்ட அதிமுக அரசின் அலட்சியமே இன்றைக்கு ஜல்லிக்கட்டு தடை பட முக்கியக் காரணம். இன்றைக்கு 49 எம்.பி.க்களை வைத்துள்ள அதிமுக அரசு ஜல்லிக்கட்டு விளையாட்டை துவக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த செப்டம்பர் மாதத்தில் "நமக்கு நாமே" பயணம் சென்ற நான், "ஜல்லிக்கட்டு விளையாட்டை மீண்டும் நடத்த மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நானே வந்து போராடுவேன்" என்று அலங்காநல்லூர் மக்களிடத்தில் உறுதிமொழி அளித்து விட்டு வந்தேன்.
வருகின்ற பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டிற்குள்ள தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைவர் கலைஞரின் அனுமதி பெற்று நானே தலைமை தாங்கி போராட்டம் நடத்துவேன் என்று எச்சரிக்க விரும்புகிறேன்












Click it and Unblock the Notifications