துணை முதல்வர் யார்?.. மேல்மட்டத்தில் நடந்த பரபர விவாதம்! #jayalalithaa
சென்னை: என்னதான் துணை முதல்வரெல்லாம் கிடையாது என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டு வந்தாலும் கூட அது குறித்த விவாதம் படு சூடாக நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விவாதம் தற்போது வேகம் பிடித்துள்ளதாம்.
முதல்வர் நீண்ட நாட்கள் அப்பல்லோவில் தங்க வேண்டும் என்று மருத்துவமனையே கூறி விட்டது. நீண்ட நாள் என்பது எத்தனை நாள் என்று தெரியவில்லை. மேலும் முதல்வருக்கு செயற்கை சுவாசம் தொடருவதாகவும் அப்பல்லோவே கூறியுள்ளது. எனவே முதல்வரால் இயல்பான முறையில் பணிகளைக் கவனிக்க முடியாத நிலையே இருப்பதாக ஊகிக்கலாம்.
எனவே டிராபிக் ராமசாமி கோரியபடி மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் கோரியபடி துணை முதல்வரை நியமித்தாக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எனவேதான் அந்த கோணத்தில் ஒரு விவாதம் சூடு பிடித்துள்ளதாம்.

துணை முதல்வர் அவசியம்
முதல்வர் ஜெயலலிதா சுகவீனமடைந்திருப்பதால் அரசு நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இதை இல்லை என்று அதிமுக தரப்பு மறுத்தாலும் கூட அதுதான உண்மை என்று அரசு அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல முக்கியக் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. அமைச்சர்கள் சரிவர பணிக்கு வருவதில்லையாம். பல அமைச்சர்கள் கோட்டை பக்கமே வருவதில்லை என்றும் சொல்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் கோப்புகள் தேக்கம்
தலைமைச் செயலகத்தில் கோப்புகள் ஆயிரக்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன. பல உயர் அதிகாரிகள் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளனர். இதனால் உயர் அதிகாரிகள் பலருக்கும் கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டு அவர்கள் பெரும் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளனராம். பல முக்கிய வேலைகள் அப்படி அப்படியே முடங்கிக் கிடக்கின்றனவாம்.

முதல்வர் தேறி வர தாமதமாகும்
முதல்வர் ஜெயலலிதா தேறி பழைய நிலைமைக்கு வர நீண்ட நாட்களாகும் என்பதால் அதுவரை முதல்வர் இடத்தை காலியாகவே வைத்திருக்க முடியாது என்பதாலும் துணை முதல்வரை நியமிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. எனவே அதிமுக தரப்பில் தற்போது துணை முதல்வர் பதவிக்கான ஆலோசனைகள் சூடு பிடித்துள்ளனவாம்.

யார் யாருக்கு வாய்ப்பு
வழக்கம் போல ஓ.பன்னீர் செல்வம் பெயர் அடிபடுகிறது. அதேசமயம், எடப்பாடி பழனிச்சாமி பெயர்தான் தற்போது பலமாக அடிபடுகிறது. அதேபோல சசிகலாவுக்கு துணை முதல்வர் பதவி போகலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. ஜெயலலதாவின் நம்பிக்கையைப் பெற்றவரை விட சசிகலாவின் நம்பிக்கையைப் பெற்றவருக்குத்தான் துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications