துபாயில் தமிழக தொழிலாளர் திடீர் மரணம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
திருச்சி: துபாய்க்கு வேலைக்கு சென்ற திருச்சி நபர் திடீர் என இறந்ததில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
திருச்சியை அடுத்துள்ள துவாக்குடி வாழவந்தான்கோட்டை ஸ்டார் நகரை சேர்ந்தவர் சுதாகர்(33). அவரின் மனைவி விமலாதேவி. அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வெல்டரான சுதாகர் கடந்த செப்டம்பர் மாதம் முகவர் மூலம் துபாய்க்கு வேலைக்கு சென்றார்.

துபாயில் வேலை பிடிக்காததால் தன்னை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு சுதாகர் முகவரிடம் தெரிவித்துள்ளார். அவரும் ஏற்பாடு செய்ய சுதாகர் ஊர் திரும்பும் தகவல் குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சுதாகரை வரவேற்க திருச்சி விமான நிலையம் சென்றால் அவர் வரவில்லை. இந்த சூழலில் சுதாகரின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவருக்கு உணவு கொடுக்கும் வீடியோ ஒன்று வாட்ஸ்ஆப் மூலம் விமலாவின் சித்தப்பாவிற்கு கடந்த நவம்பர் மாதம் வந்தது.
இதையடுத்து விமலாதேவி தனது கணவரை மீட்டுத் தருமாறு திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கடந்த 5ம் தேதி மனு கொடுத்தார். இந்நிலையில் சுதாகர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக துபாயில் இருந்து ஒருவர் நேற்று முன்தினம் விமலாவின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவரின் உடல் விமானம் மூலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
துபாயில் இருந்து நேற்று திருச்சி வந்த ஏர் இந்தியா விமானம் மூலம் சுதாகரின் உடல் வந்தது. அவரின் உடலை பெற்ற உறவினர்கள் அதை ஆம்புலன்ஸில் ஏற்றினர். அப்போது சுதாகரின் தலை மற்றும் நெற்றியில் காயம் இருப்பதை பார்த்த அவர்களுக்கு அவரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது.
உடனே அவர்கள் ஆம்புலன்ஸுடன் விமான நிலைய காவல் நிலையத்திற்கு சென்று சுதாகரின் உடலை பிரேத பரிசோதனை செய்தால் தான் உடலை எடுத்துச் செல்வோம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உடலை எடுத்துச் செல்ல மறுத்து வாக்குவாதம் செய்தது காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சுதாகரின் உடலை திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சுதாகரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுதாகரின் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications