தமிழக அரசு ஊழியர்கள் 5 லட்சம் பேர் காலவரையற்ற வேலை நிறுத்தம்- நிர்வாகம் ஸ்தம்பிப்பு
தமிழக அரசு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் 64 துறைகளைச் சேர்ந்த 5 லட்சம் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்துறை, பத்திரப்பதிவுத்துறை, கிராம நிர்வாகம் உள்ளிட்ட பல துறை ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.
வேலை நிறுத்தம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அன்பரசு, கடந்த 2011ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர், இது தொடர்பாக ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவித்தார். ஆனால், எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜெயலலிதா அறிவிப்பு
கடந்த ஆண்டு பத்து நாட்களுக்கும் மேலாக பலவகையான போராட்டம் நடைபெற்றது. சட்டசபையில் 11 அறிவிப்புகளை அப்போதய முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஏப்ரல் 25ஆம் தேதி இன்று முதல் அரசு ஊழியர்களை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்றார்.
கோரிக்கை என்ன?
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பாக முடிவெடுக்கப்படும் வரை அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம் என்றார்.
நிர்வாகம் ஸ்தம்பிக்கும்
பத்திரப்பதிவுத்துறை, வணிகவரித்துறை, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வட்டாட்சியர்கள், உள்ளிட்ட 64 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பால் தமிழக அரசு செயல்படாமல் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு கோரிக்கை
அதே நேரத்தில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தலைமைச் செயலக சங்கம், உள்ளிட்ட சில ஊழியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. போராட்டத்தில் பங்கேற்காமல் பணிக்கு செல்லும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.