இன்று 12 இடங்களில் சதமடித்த வெயில்.. சென்னையில் இந்தாண்டு முதல்முறையாக 100 டிகிரி தாண்டிய வெப்பம்
சென்னை: தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்கியிருக்கும் நிலையில், மாநிலத்தில் இன்று மட்டும் 12 இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது. அது குறித்தும் வரும் நாட்களில் வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்தும் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த ஜன. மாதம் பருவமழை முடிவடைந்தது. இந்த முறை பெரும்பாலும் வழக்கமான அளவுக்கே பருவமழை இருந்தது. இதனால் மாநிலத்தில் நீர்நிலைகள் நிரம்பியே காணப்பட்டது.

அதன் பின்னர் மாநிலத்தில் வெயிலின் தாக்கம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த பிப். மாதமே பல இடங்களில் வெயிலின் தாக்கம் உச்சம் தொட்டது. நாடு முழுக்க இதே நிலைதான்.
12 இடங்களில் சதமடித்த வெயில்: இந்தாண்டு கோடைக் காலம் மோசமாக இருக்கும் என்றும் வழக்கத்தைக் காட்டிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து மாநிலத்தில் அதிகரித்தே வருகிறது. கடந்த மார்ச் மாதமே தமிழ்நாட்டில் சில இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியது. ஏப்ரல் மாதம் தனியாகச் சொல்ல வேண்டுமா. பல இடங்களில் கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே இன்று மட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து வேலூரில் 104 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருப்பத்தூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தலைநகர் சென்னை: அதேபோல தலைநகர் சென்னையிலும் வெப்பம் சதமடித்துள்ளது. இந்தாண்டு தலைநகர் சென்னையில் வெப்பம் சதமடித்துள்ளது இதுவே முதல்முறையாகும். சென்னை மீனம்பாக்கத்தில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், மதுரை ஏர்போர்ட், கோவை, தர்மபுரி, திருத்தணி ஆகிய இடங்களில் 102 டிகிரி பாரன்ஹீட்டும் பாளையங்கோட்டை 100 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோடை விடுமுறையும் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மலை சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வருகின்றனர். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மலைப் பிரதேசங்கள் பக்கம் சென்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கொடைக்கானலில் குறைந்தபட்சமாக 69.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல குன்னூரில் 78.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், ஊட்டியில் 77.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.

வரும் நாட்களில் வானிலை: இதனிடையே வரும் நாட்களில் வெப்பம் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலையும் வானிலை மையம் பகிர்ந்துள்ளது. தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 17ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. நாளைய தினம் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications