வரலாறு திரும்பி பார்க்கும்.. முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் ஓபிஎஸ்.. மாஃபா பாண்டியராஜன்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிடுவார் என்று செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவைக்கு பிறகு தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். சசிகலாவை சட்டசபைக்குழு தலைவராக எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். இதனையடுத்து 7ஆம் தேதியன்று ஜெயலலிதா நினைவிடம் வந்த ஓபிஎஸ், தன்னை சசிகலா குடும்பத்தினர் அவமானப்படுத்தியதாக கூறினார். கட்டாயப்படுத்தி ராஜினாமா பெற்றதாகவும் கூறினார்.

இதையடுத்து சசிகலா தரப்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதனால் அதிமுக இரண்டாக பிளவுபட்டு ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என ஆனது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் உட்பட அவருக்கு ஆதரவளித்த அனைவரையும் சசிகலா கட்சியிலிருந்து நீக்கினார். இதனையடுத்து சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார்.
இந்தச் சூழ்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஏழை, எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடுமாறு அ.தி.மு.க தொண்டர்களுக்கு, அக்கட்சியின் பொதுச் செயளாலர் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழக அரசியல் வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிடுவார் என்றும் சென்னை ஆர்.கே.நகரில் நடைபெறும் கூட்டத்துக்கு போலீஸ் இடையூறு விளைவிப்பதாக அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஓபிஎஸ் அணியின் புதிய அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications