மழையால் ஏற்பட்ட சேத விவரங்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 - சென்னை கலெக்டர் அறிவிப்பு
சென்னை: சென்னை மழை சேத விவரங்களை 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதா வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் சேதங்களை கண்டறிந்து அவற்றை விரைந்து களைந்திடவும், நிவாரண உதவிகளை உடனுக்குடன் வழங்கிடவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, சென்னையில், வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் சேதங்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் வருவாய்த்துறையின் அனைத்து அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இப்பணிகளை துரிதப்படுத்தி கண்காணித்திடவும், சேதங்களை கணக்கிடவும் அனைத்து வட்டங்களுக்கும் துணை கலெக்டர் நிலையில் 10 மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் சேதங்களை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077க்கு தகவல் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.