கனமழை... சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை
சென்னை: விட்டு விட்டு கனமழை பெய்துவருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீர் வடியாமல் மக்களை வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. சாலைகளில் குளம்போல தேங்கியுள்ள வெள்ளநீரினால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

குமரி கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு அருகே நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் காலையில் வெயில் அடித்த நிலையில் பிற்பகல் 3 மணியில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், பகுதிகளில் ஒரு மணிநேரமாக கனமழை பெய்து வருகிறது. வில்லிவாக்கம், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வடபழனி, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரமாக மழை பெய்து வருகிறது.
ஏற்கனவே பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி வடியாமல் உள்ளநிலையில் விட்டு விட்டு கனமழை பெய்துவருவதால் சென்னைவாசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கனமழை பெய்து வருவதால் ஏராளமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பிற்பகல் முதல் விடாமல் கனமழை கொட்டி வருவதால் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications