5 வருடங்களில் இரண்டு மடங்கான ஜெயலலிதா சொத்து மதிப்பு!
சென்னை: ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது என்பது வேட்புமனு தாக்கல் மூலம் தெரியவந்துள்ளது.
வேட்பாளர்கள், வேட்புமனுவுடன் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். சொத்து விவரங்களை குறிப்பிடும் போது கையில் உள்ள ரொக்கம், வங்கியில் உள்ள பணம், வாகனங்கள், தங்க நகைகள் போன்றவை, அசையும் சொத்தில் இடம்பெறும். நிலம், கட்டடம் போன்றவை, அசையா சொத்தில் இடம்பெறும்.
ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலலிதா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதிலுள்ள சொத்து விவங்கள் பற்றிய ஒரு ஒப்பீடு இதோ;
64 கோடி
கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட போது, ஜெயலலிதா மீது, 10 வழக்குகள் இருந்தன. அப்போது அசையும் சொத்துக்களின் மதிப்பு, 13.03 கோடி ரூபாய், அசையா சொத்துக்களின் மதிப்பு, 51.40 கோடி ரூபாய். இவற்றின் மொத்த மதிப்பு, 64.43 கோடி ரூபாய்.
9 கார்கள்
ஆர்.கே.நகர் தொகுதியில், ஜெயலலிதா, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த போது தெரியவந்த விவரங்கள்: ஜெயலலிதா கையில் ரொக்கமாக, 41 ஆயிரம் ரூபாய் உள்ளது. அவர் பெயரில், ஒன்பது கார்கள் உள்ளன.
கடன்
அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு, 41.63 கோடி ரூபாய். அசையா சொத்துக்களின் மதிப்பு, 72.09 கோடி ரூபாய். இவற்றின் மொத்த மதிப்பு, 113.73 கோடி ரூபாய். ஜெயலலிதா பெயரில், ஐந்து வழக்குகள் உள்ளன. அவரது பெயரில் கடன், 2.04 கோடி ரூபாய் உள்ளது.
இரட்டிப்பு
2011ல் ரூ.64 கோடியாக இருந்த ஜெயலலிதா சொத்து மதிப்பு இப்போது ரூ.113.73 கோடியாக இரட்டிப்பாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.