ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க சுற்றுலா நிறுவனத்துக்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: உரிய சேவை வழங்காமல், வாடிக்கையாளர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய, சுற்றுலா நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.3 லட்சத்தை நஷ்ட ஈடாக தர வேண்டும் என்று, சென்னையிலுள்ள நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
நெல்லை மாவட்டம், குட்டத்தை சேர்ந்த சுயம்பு ஆனந்தன், சென்னை அண்ணா நகரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் தனது மனைவி, மகன், மகள், உறவுக்காரர் முருகானந்தம், குடும்ப நண்பர், ஷாபிக் அலி அகமது ஆகியோருடன் சேர்ந்து 2011 மே மாதம், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை, சென்னை, சேத்துப்பட்டிலுள்ள காக்ஸ் அன்டு கிங்ஸ் என்ற தனியார் நிறுவனம் வழியாக மேற்கொண்டிருந்தார். ஆனால், அங்குதான் ஆரம்பித்தது சிக்கல். இன்ப சுற்றுலாவை துன்ப சுற்றுலாவாக மாற்றிவிட்டுள்ளது, அந்த தனியார் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம்.
இதுகுறித்து சுயம்பானந்தம் உள்ளிட்ட 6 பேரும், சென்னையிலுள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தாய்லாந்து மற்றும் சிங்கப்பூருக்கு நாங்கள் ஆறு பேரும் ஒரே குழுவாக பயணம் செய்ய மொத்தம் ரூ.5.61 லட்சத்தை காக்ஸ் அன்டு கிங்ஸ் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்தியிருந்தோம்.
ஆனால் பயணத்தின்போது, விமான டிக்கெட்டில் குளறுபடி, தங்கும் ஹோட்டல் அறைகளில் குளறுபடி, உணவு வசதி, சுற்றிப்பார்க்கும் இடங்களில் போக்குவரத்து வசதி, நுழைவு கட்டண வசதி உள்ளிட்ட எதையுமே, சுற்றுலா நிறுவனம் சொன்னபடி செய்து தரவில்லை. ஆறு பேருக்கும் அருகருகே கூட இருக்கை வசதி செய்து தரவில்லை.
5 பிளஸ் 1 என்று எங்களிடம் கட்டணம் பெற்ற சுற்றுலா நிறுவனம், 4 பிளஸ் 1 என்று, சிங்கப்பூர் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளது. இதனால், எங்களில் ஒருவருக்கு எங்குமே இடம் கிடைக்காத சூழ்நிலை உருவாகியது. உணவு வசதிகளை செய்து கொடுக்க, சொன்னதைவிட கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டது.
இதுபோன்ற அடுத்தடுத்த பொறுப்பற்றத்தன்மையுடன் கூடிய குளறுபடிகளால், நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானோம். மகிழ்ச்சிக்காக சுற்றுலா சென்ற நாங்கள், மன உளைச்சலுடன் நாடு திரும்பினோம். எனவே, எங்களுக்கு ஆன கூடுதல் செலவீனம் மற்றும் மன உளைச்சலுக்கு ஈடாக ரூ.50 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த மாநில நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, ரகுபதி, நீதித்துறை உறுப்பினர் ஜெயராம், உறுப்பினர் பாக்கியவதி ஆகியோர் பெஞ்ச் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது: மனுதாரர்களுக்கு செய்வதாக உறுதியளித்த சேவைகளை, சுற்றுலா நிறுவனம், முழுவதுமாக செய்துதரவில்லை என்பது சந்தேகத்துக்கு இடமின்றி, சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் ஆறு பேருக்கும், தலா ரூ.50 ஆயிரம் வீதம், மொத்தம், ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். டிக்கெட் கட்டண பாக்கி, ரூ.1.42 லட்சத்தை, மனுதாரர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும்.
பயணிகள் அடைந்த மன உலைச்சலுக்காகவும், உடல்ரீதியான துன்பத்திற்காகவும், தலா ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டும். தொழிலில் நேர்மையாக நடந்துகொள்ளாதது, சேவை குறைபாடு போன்றவற்றுக்காக, மொத்தம் ரூ.50 ஆயிரத்தை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும். வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும். ஆக மொத்தம், ரூ.5,02,303 லட்சத்தை, பயணிகளுக்கு காக்ஸ் அன்டு கிங்ஸ் நிறுவனம் இரு மாதங்களுக்குள் அளிக்க வேண்டும். அப்படி அளிக்க தவறினால், ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன், அந்த தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.