மேகமூட்டம், யானை நடமாட்டம்.. ஊட்டி செல்ல வாகன ஓட்டிகள் கடும் அவதி
ஊட்டி: மேகமூட்டம், யானை நடமாட்டம் போன்றவற்றால், ஊட்டிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் அணைகள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

நேற்று காலை சிறிது நேரம் வெயில் அடித்தது. ஆனால், பின்னர் கடும் மேக மூட்டம் நிலவியது. குறிப்பாக ஊட்டி-கோத்தகிரி சாலையில் அருகில் நிற்பவர்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் மேக மூட்டம் நிலவியது.
மேகமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க திணறினர். முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள். மேகமூட்டம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேலும் ஊட்டி நகரில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்கள் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். ஊட்டியில் நிலவும் மோசமான காலநிலையால் பள்ளி மாணவ-மாணவிகளும் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக, கோடநாடு பகுதியில் 10 மி.மீ. மழை பெய்தது. ஊட்டி நகரில் 1.20 மி.மீ மழை பெய்தது.
இதனிடையே, பந்தலூர் அருகே ரோட்டில் யானை குறுக்கே நின்றுகொண்டதால் வாகன ஓட்டிகள் வண்டிகளை இயக்க முடியாமல் பீதியில் உறைந்தனர். பந்தலூரில் இருந்து சேரம்பாடி செல்லும் சாலையில் எலியாஸ் கடை பிரிவு உள்ளது.
நேற்று மதியம் 2 மணிக்கு ஒரு யானை எலியாஸ் கடை பிரிவு பகுதிக்கு வந்தது. பின்னர் சேரம்பாடி தொழிற்சாலைக்கு செல்லும் சாலையில் அந்த யானை நின்று வாகனங்களை மறித்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் யானையை விரட்டினர். இதனால் அங்கிருந்து சென்ற காட்டு யானை கோழிக்கோடு செல்லும் சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications