குற்றாலம் பேரரருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
குற்றாலம்: குற்றாலம் பேரருவியில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவியில் சனிக்கிழமை இரவு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி முதலாவது நடைபாதையை தொட்டுக்கொண்டு தண்ணீர் சீறிப் பாய்ந்தது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் அதிக அளவு கொட்டியது. இதையடுத்து அருவிகளில் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அருவிகளில் தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து பேரருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை நீக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் பலத்த மழை பெய்தது.
இதனால் பேரருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பேரருவியில் பொதுமக்கள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர். குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை தினங்களை குற்றாலத்தில் கழிப்பதற்காக வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.