குற்றாலம் அருவியில் குளிக்க தடை.. விடுமுறைக்கு குவிந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் வந்திருந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், குற்றாலத்தில் இதமான சூழல் நிலவியது. குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் சீராகக் கொட்டியது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வருகை புரிந்து வந்தனர். குறிப்பாக, காலாண்டு விடுமுறை மற்றும் இந்த வார தொடர் விடுமுறை காரணமாக அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் குற்றாலம் மீண்டும் களை கட்டி, வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், நேற்று முதல் மெயின் அருவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், மற்ற அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இன்று காலையில் மெயின் அருவில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி அருவியின் ஒரு பகுதியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நீர்வரத்து குறையும் பட்சத்தில் மீண்டும் மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றாலம் அருவிக்கு குளிக்கச் செல்லும் சுற்றுலா பயணிகள், 9600753806 என்ற எண்ணுக்கு Courtallam என டைப் செய்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்தால், அன்றைய சீசன் நிலவரம் Tenkasi Life சமூக வலைதள பக்கம் சார்பாக உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications