குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை.. கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு.. ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்!
தென்காசி: தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி குற்றாலம் களை இழந்து காணப்பட்டது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாரல் பொழிந்து குற்றாலத்தில் சீசன் நிலவும். ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அந்த நிலை இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், குற்றாலத்தில் இதமான சூழல் நிலவியது. பேரருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் சீராகக் கொட்டியது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குற்றாலத்திற்கு வருகை தரத் தொடங்கினர். சுற்றுலாப் பயணிகள் வருகையால் குற்றாலம் மீண்டும் களை கட்டி, வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், மீண்டும் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல வாரங்களுக்குப் பிறகு மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இதனால் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் தற்போது பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று குற்றாலம் சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நீர்வரத்து குறையும் பட்சத்தில் மீண்டும் மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றாலம் அருவிக்கு குளிக்கச் செல்லும் சுற்றுலா பயணிகள், 9600753806 என்ற எண்ணுக்கு Courtallam என டைப் செய்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்தால், அன்றைய சீசன் நிலவரம் Tenkasi Life சமூக வலைதள பக்கம் சார்பாக உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications