குற்றாலம் சாரல் விழாவில் குடிமகன்கள் அட்டகாசம்... பாதுகாப்பு கேட்கும் சுற்றுலாப்பயணிகள்!
குற்றாலம் சாரல் விழா நிகழ்ச்சியின் போது குடிமகன்கள் போதையில் குத்தாட்டம் போட்டு அலங்கோலப்படுத்துவதால் நிகழ்ச்சியை ரசிக்க முடியவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
குற்றாலம் : சாரல் விழாவில் குடிமகன்கள் அட்டகாசம் செய்வதாக குற்றாலம் வந்துள்ள சுற்றுலா பயணிகள் புகார் கூறியுள்ளனர். சாரல் விழாவில போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குற்றாலம் என்றாலே இதமான இயற்கை சூழலும், மனதை இளைப்பாற்றும் ரம்மியமான குளியலும் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். இதமான காற்று, மெல்லிய சாரல், பசுமையான மலைப்பகுதி, உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை மணம் நிறைந்த அருவிக்குளியல் என குறைந்த விலை பட்ஜெட் சுற்றுலாவிற்கு ஏற்ற இடம் குற்றாலம்.

தென்மேற்குப் பருவமழை காலத்தில் பயணிகள் குற்றாலத்தில் நிலவும் இதமான சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆண்டு தோறும் 50 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு சாரல் திருவிழா ஜூலை 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட்3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு மழையும் குறைந்து விட்டது. அருவிகளிலும் தண்ணீர் வரத்து இல்லை என்பதால் சாரல் விழா களைகட்டவில்லை. எனினும் சாரல் விழா நடைபெறும் 8 நாட்களும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேடையில் கலைஞர்கள் இசைக் கச்சேரி நடத்த மேடைக்கு அருகில் குடிமகன்கள் அட்டகாசம் செய்கின்றனர். சட்டையை கழற்றிப் போட்டுவிட்டு போதையில் குத்தாட்டம் போடும் போதை ஆசாமிகளின் செயல் சுற்றுலாப் பயணிகளையும், இசைக்கச்சேரி நடத்துபவர்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
எனவே சுற்றுலாப் பயணிகள் எந்த சிரமமுமின்றி சாரல் விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications