எச். ராஜா, எஸ்.வி. சேகருக்கு எதிராக புதுவையில் குழந்தைகளுடன் பெண்கள் போராட்டம்
எச். ராஜா, எஸ்.வி. சேகருக்கு எதிராக புதுவையில் இன்று போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி: சமூக வலைதளங்களில் இழிவாக கருத்துகளைப் பதிவிடும் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை நடத்திய பெண்கள், குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியின் பிரதான காமராஜர் சாலையில் இன்று திடீரென தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மகளிர் அணியினர் குழந்தைகளுடன் போராட்டத்தில் குதித்தனர். எச். ராஜா, எஸ்.வி. சேகர் படங்களுக்கு செருப்படி கொடுத்து இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை குழந்தைகளுடன் கைது செய்தனர்.
இதேபோல் பல்வேறு தமிழ் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து புதுவையின் பிரதான சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.