இனியது இனி நடக்கட்டும். வேதனை நீங்கட்டும்.. புதுமைகள் வந்து தங்கட்டும்.. டி.ஆர். பொங்கல் வாழ்த்து!
சென்னை: லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில்,
தை மாதம் பிறக்கட்டும்...
தரணியது சிறக்கட்டும்...
இயற்கை அன்னை கை கொடுக்கட்டும்...
இனியது மண்ணில் இனி நடக்கட்டும்...
உழைப்புக்கு உயர்வு கிட்டட்டும்...
விவசாயிகளின் வேதனை நீங்கட்டும்...
புதுமைகள் வந்து பூமியில் தங்கட்டும்... அது
பொங்கலோ பொங்கலென்று பொங்கட்டும்
தமிழர் திருநாள்...
தன்னிகரற்ற நன்னாள்...
இதயங்கள் மணக்க...
இலட்சியங்கள் ஜெயிக்க...
இனிய பொங்கல் வாழ்த்துகள் என்று கூறி வாழ்த்தியுள்ளார்.

தி.க,. தலைவர் கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்தில்,
திராவிடர் திருநாளான பொங்கல் விழா (15.1.2015) தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்; உலகத்தை உய்விக்கும் உழவர்தம் அறுவடைத் திருவிழா - எமது பெருவிழா! புதுப்பானையில் புத்துருக்கு நெய்யோடு பொங்க வேண்டிய உழவர் இல்லத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாக மனக் குமுறல் பொங்கும் வேதனை; அது நீங்கி, மதவெறி, ஜாதிவெறியற்ற சமத்துவ சமுதாயம் அமையும் என்ற நம்பிக்கை மக்கள் உள்ளத்தில்! பொங்கலோ, பொங்கல் என்று பொங்கட்டும்!
தொண்டறம் ஓங்கி துவண்ட சமூகப் பயிர்கள் செழிக்கட்டும்! அனைவருக்கும் நம் இனிய பொங்கல் வாழ்த்துகள் என்று வாழ்த்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில்,
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும், கொண்டாடி குதூகலிக்கும் இந்த நன்னாளில் அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகிறது.
உழுபவன் கையில் நிலம் இருக்க வேண்டும்; இருக்கும் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். உலகத்தார் அனைவருக்கும் உணவளிக்கும் உழவன் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கு உரிமையுள்ளவராய் இருக்க வேண்டும். உணவளிக்கும் தொழில் கட்டுபடியானதாய், மகிழ்ச்சி தரத்தக்கதாய் அமைவதற்கு விதையும் உரமும் மருந்தும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும். நதியும் குளமும் கிணறும் பராமரிக்கப்பட்டு பாசன வசதிகள் மேம்பட்டதாய் இருக்க வேண்டும். நதிநீரில் பாரம்பரிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்க வேண்டும். அதன் மூலம் விவசாயிகள் உணவளிக்கும் இத்தொழிலை உயிரினும் மேலாய் கொண்டாட வேண்டும் என்கிற உன்னதமான நிலை விவசாயிகளுக்கு வாய்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது; வாழ்த்துகிறது; அதற்காக போராடுகிறது.
ஆனால், விவசாயிகளைக் கொண்டாட வேண்டிய மத்திய மாநில அரசுகள் அவர்களைத் திண்டாட வைக்கும் கொள்கைகளை கடைபிடித்து வருகின்றனர். அந்நிய-இந்திய பெரு நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை விவசாயிகளின் சம்மதமின்றி பறிப்பதற்கான சட்டம், மீத்தேன் வாயுவை எடுப்பதற்காக நஞ்சை நிலங்களை கபளீகரம் செய்யும் முயற்சி, உரங்களுக்கான மானிய வெட்டு, சர்க்கரை ஆலைகளுக்கு ஆதரவாக கரும்பின் ஆதார விலையை உயர்த்த மறுப்பது, நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகையை மாநில அரசு அளிக்க முன்வந்தாலும் அதை ஏற்கமாட்டோம் என்று கூறுகிற மத்திய அரசின் நடவடிக்கை ஆகியவை விவசாயிகளை விவசாயத்தை விட்டு வேறு தொழிலை நோக்கி ஓட வைத்துக் கொண்டிருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காக மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் சுரண்டப்படுவதால் நீராதாரம் பாதிக்கப்பட்டு விளைநிலங்கள் நீருக்கு ஏங்கி நிற்கும் நிலை தொடர்கிறது. இவற்றையெல்லாம் எதிர்த்து, விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு கூடுதல் வீரியத்தோடும் வேகத்தோடும் போராடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உழவர் திருநாளில் உறுதி பூணுகிறது.
அனைத்து மக்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சிப் பொங்கல் பொங்கட்டும் என்று வாழ்த்துகிறது. இந்த மகிழ்ச்சிக்கு தடைகளாய் நிற்கும் கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களும் வெற்றிகளும் பொங்கட்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
கொ.ஜ.க வாழ்த்து
கொங்குநாடு ஜனநாயக கட்சியின் தலைவர் ஜி.கே நாகராஜ் வெளியிட்டுள்ள தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்து செய்தியில்,
தை முதல் நாளே தமிழருக்கு புத்தாண்டு.இந்த இனிய திருநாளில் தமிழர் திருநாளாம் பொங்கலை "பொங்கலோ பொங்கல்" என்று பொங்கி அனைவர் இல்லத்திலும் பொங்கலோடு மகிழ்ச்சியும் பொங்க அறுவடைத் திருநாளில் நீராதாரம் பெருகி விவசாயம் செழித்து வளமான தமிழகத்தையும்,உலகம் போற்றும் வலிமையான இந்தியாவையும் உருவாக்கி காட்டுவோம் என்ற உறுதிமொழியை இந்த நன்னாளில் ஏற்போம்.
கொங்குநாடு ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழக மக்களுக்கும் தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் கொண்டாடுகின்ற அனைத்து மக்களுக்கும்,உலகம் முழுவதும் நிரம்பியிருக்கும் தமிழர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications