வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி வெளியேற்றம்!
சென்னை: ஆர். கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 27ம் தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை ராணி மேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில்இடைத்தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி காலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தார். அவரது கையில் காமிரா இருந்தது. இதற்கு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக டிராபிக் ராமசாமி போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். இதனைத் தொடர்ந்து டிராபிக் ராமசாமி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, தாம் வெளியேற்றப்பட்டது நியாயமற்ற செயல் என்றார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாகவும் அவர் கூறினார்.
இடைத்தேர்தலில் போட்டியிட்டதில் இருந்தே, பரபரப்பை கிளப்பி வரும் ராமசாமி, வாக்கு எண்ணிக்கையின் போதும் பரபரப்பை ஏற்படுத்தினார். இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கும் போதுமையத்துக்குள் கேமராவுடன் ராமசாமி உள்ளே நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.