செயத்தக்க செய்க...எப்படித் தேர்வை எதிர்கொள்ளலாம்.. மாணவர்களுக்கு திறன் பயிற்சி
காரைக்குடி: காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்வது குறித்தும் தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை ஏழாம் அறிவு அமைப்பினர் "செய்யத்தக்க செய்க" என்ற தலைப்பில் அளித்தனர். இப்பயிற்சியை சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர்.செந்திவேல்முருகன் அவர்கள் தலைமையேற்று துவக்கிவைத்தார்.

தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். தலைமைப் பயிற்சியாளர் கணேசன் மற்றும் பயிற்சியாளர்கள் தேவராஜன், கஸ்தூரிரங்கன், வடிவேல் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

தேர்வுக்கு தயாராவது, இலக்கு நிர்ணயித்தல், நினைவாற்றலை மேம்படுத்துதல்,நேர மேலாண்மை ஆகியவை குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் செந்திவேல்முருகன் பேசும் போது மாணவர்கள் தமது எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு பயில வேண்டும் எனவும் இது போன்ற பயிற்சியை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

அரசு பொதுத் தேர்வை முதன்முதலாக எழுதவுள்ள தங்களுக்கு இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் இப்பயிற்சியின் மூலம் பல்வேறு புதிய செய்திகளை தெரிந்து கொண்டதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். இப்பயிற்சி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, மு.வி.அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆசாத் மெட்ரிக் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் சுமார் 140 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியை விஜயலெட்சுமி அவர்கள் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியை கீதா சுந்தரேஸ்வரி அவர்கள் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications