தமிழகத்தில் ரயில்கள், பேருந்துகள் வழக்கம் போல இயங்குகின்றன!
சென்னை: மத்திய தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, தமிழகத்தில் பேருந்துகள், ரயில்கள் இயக்கத்தில் பாதிப்பு இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும், ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பைப் பதிவு செய்யப் போவதாகவும் ரயில்வே ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை மன்றோ சிலை அருகே வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ரயில்வே ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
வங்கிப் பணிகள் பாதிக்கும்?
வங்கி ஊழியர்கள், அதிகாரிகளைக் கொண்ட 11 சங்கங்களில் 8 சங்கங்களைச் சேர்ந்த 6 லட்சம் பேர் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபடுவதால் வங்கிப் பணிகள் மட்டும் தமிழகத்திலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், அத்தியாவசிய சேவைகளைப் பாதிக்கும் வகையிலும் நடந்து கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.