ஒரே ஒரு விநாடி.. முதல் திருநங்கை எஸ்.ஐ என்ற கனவை இழந்தார் பிரித்திகா யாஷினி
சென்னை: தேர்வுகள் அனைத்திலும் வெற்றி பெற்று, முதல் திருநங்கை எஸ்.ஐ., என்ற தகுதியை பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் தமிழக காவல்துறையில் எஸ்.ஐ., பணிக்கான உடல் தகுதி திறன் போட்டியில் பங்கேற்ற பிரித்திகா யாஷினி, ஒரு வினாடி தாமதத்தால் தனது கனவினை இழந்தார்.
தமிழக காவல்துறையில், 1,078 சப் - இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்ய, மே, 23, 24ம் தேதிகளில் எழுத்துத் தேர்வு நடந்தது. அதில், 5,000 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு, தமிழகம் முழுவதும் 11 மையங்களில் உடல்தகுதி மற்றும் உடல்திறன் போட்டி நடைபெற்றது.

சென்னை, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திலும் உயரம் அளத்தல், ஓட்டப்பந்தயம் போன்றவை நடைபெற்றன. இதில், கலந்து கொள்வதற்காக பிரித்திகா யாஷினி என்ற திருநங்கையும் வந்திருந்தார்.
இவர் ஏற்கனவே போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். எனவே, மீதி தேர்வுகளிலும் வெற்றி பெற்று முதல் திருநங்கை எஸ்.ஐ., என்ற தகுதியை பெறுவேன் என்ற நம்பிக்கையோடு அவர் உடல் திறன் போட்டிகளில் பங்கேற்றார்.
நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் சுற்று போட்டிகளில் பிரித்திகா வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நேற்று நடந்த போட்டிகளில் அவர் கலந்து கொண்டார். அப்போது 100 மீட்டர் தூரத்தை 17 விநாடிகளில் கடக்க வேண்டும் என்ற கட்டாயத்தோடு ஓடத் தொடங்கினார்.

முதல் திருநங்கை எஸ்.ஐ., ஆகியே தீருவேன் என்ற வெறியோடு ஓடத் தொடங்கிய பிரித்திகாவை அவரது சக தோழிகள் ஊக்குவித்தனர். ஆனால், ஓடிக்கொண்டிருந்த போதே அவருக்கு முட்டியில் காயம் காரணமாக வலி ஏற்பட்டது. ஆனபோதும் நிர்ணயிக்கப் பட்ட தூரத்தை அடைந்தார். ஆனால், அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை அடைய முடியவில்லை.
இதனால், போட்டியில் இருந்து விலகினார் பிரித்திகா. அதுவரை கஷ்டப்பட்டு ஓடி வந்த அவர், இலக்கை அடைந்ததும் வலியால் கீழே சுருண்டு விழுந்தார்.
பின்னர் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்அ பிரித்திகா, ‘முதல் திருநங்கை எஸ்.ஐ., ஆக வேண்டும் என கடந்த ஐந்து ஆண்டுகளாக கனவு கண்டு வந்தேன். எனது முயற்சிகள் மூலம் நிச்சயமாக திருநங்கைகள் சமூகத்தை பெருமை அடையும் என நம்பினேன்' என்றார்.
ஆரம்பத்தில் பிரித்திகாவின் விண்ணப்பத்தை காவல் துறை நிராகரித்தது. காரணம் அவரது கல்விச் சான்றிதழ்களில் ஆண் பெயர் இருந்தது தான். பின்னர் அவர் தனது பெயரை சட்டப்படி சான்றிதழ்களில் மாற்றினார். அதனைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வில் அவர் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications