திருநங்கைகள் வீட்டு கிரகப்பிரவேசம் - சீர்வரிசைப் பொருட்களுடன் கோலாகல கொண்டாட்டம்
ராசிபுரம்: ராசிபுரத்தில் திருநங்கைகள் கட்டிய வீட்டிற்கு மற்ற திருநங்கைகள் ஊர்வலமாக சீர்வரிசைப் பொருட்கள் கொண்டு வந்து விமரிசையாக கிரகப் பிரவேச விழாவினை சிறப்பித்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, நாமகிரிபேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அரியாக்கவுண்டம்பட்டி காட்டு வளவு பகுதியில் மாவட்ட நிர்வாகம் 10 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்கி உள்ளது.
இதில் பயன் அடைந்த மாளவிகா, சுஜாதா ஆகிய 2 திருநங்கைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அருகருகே புதிதாக வீடு கட்டி உள்ளனர். இதற்கான கிரகப்பிரவேசம் விநாயகர் சதுர்த்தியான நேற்று நடந்தது. வீடு கிரகப்பிரவேசத்தை மூத்த திருநங்கைகள் வடிவம்மா, விஜயா அம்மா, துளசியம்மா, ஜீவா ஆகியோர் முன்னின்று நடத்தி வைத்தனர்.
திருநங்கைகள் புதிதாக வீடு கட்டி உள்ளதற்கு சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட சக திருநங்கைகள் வெள்ளி விளக்கு, எவர் சில்வர் பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள், வெள்ளி தோரணம், பழங்கள், ஆகியவற்றை சீர்வரிசையாக வழங்கினார்கள்.
முன்னதாக அவர்கள் நாமகிரிபேட்டை பஸ் நிலையத்தில் இருந்து மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். திருநங்கைகள் ஊர்வலமாக சீர்வரிசை கொண்டு சென்றதை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.