சென்னை பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து ஊழியர்கள் சாலைமறியல் வாபஸ்
சென்னை பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Recommended Video
சென்னை: பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த நிலையில் நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தை பிறகு தற்போது போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டனர்.
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்லவன் இல்லத்தின் முன்பு, 500க்கும் மேற்பட்டோர் நள்ளிரவிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மாலைக்குள் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தை திரும்பப்பெறுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவு போக்குவரத்து ஊழியர்கள் சென்னை பல்லவன் இல்லம் முன்பு பேருந்துகள் மீது கற்களை வீசி மறியலில் ஈடுப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். நாற்காலிகளை வீசி எறிந்தும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிவந்தது.
இந்நிலையில் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் தொழிலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது சங்க நிர்வாகிகள் கூறுகையில் போராட்டத்தை வாபஸ் பெற்று கொள்கிறோம். நாளை முதல் வழக்கம் போல பேருந்துகள் இயங்கும்.
வரும் 27, 28 ஆகிய தேதிகளில் அரசுடன் பேச்சுவார்த்தையில் இணைக்கமான முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் 27-ஆம் தேதிக்கு பிறகு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.