மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்: திருச்சியில் கணவர் விநோத புகார்
திருச்சி: கர்ப்பமாக இருந்த மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயமாகிவிட்டதாக கணவர் ஒருவர் திருச்சி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். எத்தனையோ விநோதமான வழக்குகளை சந்தித்துள்ள திருச்சி பொன்மலை காவல் நிலைய போலீசார் இந்த புகாரைப் பார்த்த உடன் தலைசுற்றித்தான் போயினர்.
இந்த பரபரப்பு புகாரை கொடுத்த நபரின் பெயர் கஜேந்திரன் என்பதாகும். இவர் திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவர் தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கஜேந்திரனுக்கும் அவரது உறவினரான கீழகல்கண்டார்கோட்டை அம்பேத்கர் நகர் பொன்னன் மகள் சங்கீதாவுக்கும் கடந்தாண்டு செப்டம்பர் 17ம்தேதி திருமணம் நடைபெற்றது. சில நாட்களிலேயே சங்கீதா கர்ப்பமடைந்ததாக கூறி இபி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆலோசனை பெற்று வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வளைகாப்பு நடத்தி தாய் வீடான அம்பேத்கர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில்தான் புதன்கிழமையன்று கஜேந்திரன் பொன்மலை மகளிர் காவல்நிலையத்தில், தனது கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருந்த குழந்தையை காணவில்லை. அதை கண்டுபிடித்து தருமாறு விசித்திரமான புகார் ஒன்றை கொடுத்தார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சங்கீதா கருவுற்றார். கடந்த ஜூலை 5ம்தேதி வளைகாப்பு நடத்தி தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வளைகாப்புக்கு வந்த கஜேந்திரன் தூத்துக்குடி சென்று விட்டார். போனில் நலம் விசாரித்தபோது பிரசவ தேதி ஆகஸ்ட் 9ம்தேதி என டாக்டர்கள் கூறியதாக சங்கீதா தெரிவித்துள்ளார்.
பிரசவ தேதியன்று கணவருக்கு போன் செய்து பிரசவம் 9ம்தேதியில்லை என்றும், குழந்தை பிறப்பது ஆடி மாதம் என்பதால் ஆவணி மாதத்தில் ஆபரேசன் செய்து குழந்தையை எடுக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கஜேந்திரன் திருச்சி வந்து மனைவியை பலமுறை ஸ்கேன் செய்ய அழைத்தும் மறுத்துள்ளார்.
கிராம முக்கியஸ்தர்களின் சமரசத்திற்கு பிறகு தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது சங்கீதா வயிற்றில் குழந்தை இல்லை என அறிக்கை வரவே அதிர்ச்சியடைந்த கஜேந்திரன் பொன்மலை போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பொன்மலை மகளிர் இன்ஸ்பெக்டர் மரகதம் நடத்திய விசாரணையில், சங்கீதா இபி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கான சிறப்பு சிகிச்சை பெறாமல் ஓபி அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வந்தது தெரிந்தது. மேலும் குழந்தை இறந்தே பிறந்தது, பெண் குழந்தை என்பதால் வீட்டின் அருகில் உள்ளவரிடம் கொடுத்து விட்டோம், கழிப்பறைக்கு செல்லும்போது விழுந்து விட்டது, வளைகாப்பிற்கு பிறகு கரு கலைந்துவிட்டது என சங்கீதா மாறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். உண்மையாகவே சங்கீதா கர்ப்பமாக இருந்தாரா என்பதே சந்தேகம் எழுந்துள்ளது.
வடிவேலு கிணற்றை காணோம் என்கிற கதையாக இப்போது வயிற்றில் இருந்த குழந்தையைக் காணோம் என்று புகார் அளித்துள்ளது திருச்சி பொன்மலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications