தெருக்கூத்து கலைஞர் கோவன் கைது- மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம்
திருச்சி: திருச்சியைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞரான கோவன் கைதை கண்டித்து திருச்சியில் மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடியை கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
திருச்சி உறையூர் அரவானூர் பகுதியை சேர்ந்தவர் சிவதாஸ் என்ற கோவன். இவர் மக்கள் கலை இலக்கிய கழகத்தில் கலைக்குழு பொறுப்பாளராக உள்ளார். மதுவிலக்கை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பிரசார பாடலை கோவன் பாடினர். இந்த பாடல் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோவனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தலைவர் கண்ணையா ராமதாசை போலீசார் தேடி வருகின்றனர். தெருக்கூத்து பாடகரான கோவன் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி தில்லைநகரில் காந்திபுரம், மூவேந்தர் நகர், சிட்டி தெருவில் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர், தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிருந்தனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள மரங்கள் மீதும், கம்பங்கள் மீதும் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த போராட்டம் குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தெருக்கூத்து பாடகர் கோவன், தில்லை நகர் காந்திபுரம் பகுதியில் அடிக்கடி பிரசாரம் செய்வார். மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவன் இந்த பகுதியில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களில் பாடி உள்ளார். இதனால் கோவன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி ஏற்றி உள்ளோம்'' என்றனர். கருப்பு கொடி கட்டப்பட்டது குறித்து தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார், உளவு பிரிவு போலீசார், நுண்ணறிவு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி சென்றனர்.
தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் வீடுகள் மற்றும் மரங்களில் கருப்பு கொடி கட்டப்பட்ட சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நாளை மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அவர்கள் அறிவித்து உள்ளனர்.