திருச்சியில் “வெள்ளை சட்டை – காக்கி பேண்ட்” டிரெண்ட்.. விஜய் ஸ்டைலில் வந்த இளம் வாக்காளர்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் உடை தற்போது புது டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆதரவாளர்கள், வெள்ளை சட்டை மற்றும் காக்கி பேண்ட் அணிந்து வாக்களிக்க வருவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே, வெள்ளை சட்டைகள் மற்றும் காக்கி பேண்ட்களின் டிமாண்ட் தமிழகத்திலும், இ-காமர்ஸ் தளங்களிலும் அதிகரித்துள்ளது. விஜய் பிரச்சாரம் துவங்கியதில் இருந்து மக்கள் அவரை காண செல்வது அதிகரித்து வந்தது. இப்படி செல்லும் போது விஜய்யின் தீவிரமான ஆண் ரசிகர்கள் வெள்ளை சட்டை - காக்கி பேண்ட் அணிந்தும், பெண்கள் தவெக கட்சி கொடியின் நிறத்தில் புடவை அணிந்தும் வந்திருந்தனர். இதே வழக்கம் தற்போது வாக்குசாவடி வரையிலும் வந்துள்ளது.

"விஜய் ஸ்டைல்" உடைகளை வாங்கி அணிவது தவெக கட்சி ஆதரவாளர்களிடையே ஒரு டிரெண்டாக மாறியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் வாக்கு அளித்துவிட்டு சமுக வலைத்தளத்தில் வெள்ளை சட்டை - காக்கி பேண்ட் புகைப்படமும் பதிவிட்டு வருகின்றனர்.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு பகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளில், ஆண்கள், பெண்கள் உட்பட பலர் வெள்ளை சட்டை மற்றும் காக்கி பேண்ட் அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உடை மூலம் தவெக காட்சி ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படையாக காட்டி வருகின்றனர்.
மேலும், ஸ்ரீரங்கம் அருகே, ஒரு வாக்குச்சாவடியில் ஒரு திருநங்கை, வெள்ளை சட்டை மற்றும் காக்கி பேண்ட் அணிந்து வந்து மற்ற பெண் வாக்காளர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டதும் இணையத்தில் வைரலாது.

இந்த தேர்தலில், உடை ஒரு புதிய அரசியல் மொழியாகவே மாறியுள்ளது. முன்னர் கொடிகள், பதாகைகள், துண்டுகள் வாயிலாக வெளிப்பட்ட ஆதரவு, இப்போது உடைத் தேர்வுகளிலும் பிரதிபலிக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில், இந்த டிரெண்ட் வேகமாக பரவி வருகிறது.

மேலும் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் சில வாக்குச்சாவடிகளில், வாக்கு இயந்திரத்தில் நடிகர் விஜய் புகைப்படம் இல்லையென்று சிலர் கேள்வி எழுப்பியது சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் இடம்பெறாது என்பதறியாமையே இந்த குழப்பத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே நேரத்தில், திருச்சி தில்லைநகர் மக்கள் மன்ற வாக்குச்சாவடியில் அமைச்சர் நேருவின் குடும்பத்தினர் காலை 7 மணிக்கே வாக்களிக்க வந்தனர். வாக்களிக்கும் போது சின்னத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், இயந்திரத்தை சரிசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 50 நிமிடங்கள் காத்திருந்த அமைச்சர் நேரு, பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டதும் தனது மனைவி சாந்தாவுடன் வாக்களித்தார்.












Click it and Unblock the Notifications