நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்! ஜெ. சொத்து குவிப்பு வழக்கு குறித்து கருணாநிதி!
சென்னை : ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதி என்றும் வெல்லும். எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
''குற்றவாளிகள் மீது கூறப்பட்டுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் காட்டப்படவில்லை என்பதால் இதைப் பொய் வழக்கு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்; ஒரு ரூபாய் மாத ஊதியமாகப் பெற்ற ஜெயலலிதாவுக்கு 66 கோடி ரூபாய் சொத்து உள்ளது என்பதை லஞ்ச ஒழிப்புக் கண்காணிப்புத் துறை உறுதிப் படுத்தியுள்ளது என்றும்; தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலை தான் நிலவுகிறது என்றும்;

65க்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளை தேவையில்லாமல் சுட்டிக்காட்டியும் கூட, 20 சதவிகித அளவுக்குக் கூட எதிர்த் தரப்பில் ஆதாரங்களோடு வாதாடவில்லை என்றும்; இறுதியில் உண்மைகளை ஆராய்ந்து அதற் கேற்றபடி தீர்ப்பு வழங்குவேன் என்றும்; குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கும் எந்த ஆவணத்தையும், ஆதாரத்தையும் எதிர்த்தரப்பினர் தாக்கல் செய்யவில்லை என்றும்; டி.வி.ஏ.சி., பொய் வழக்கு போட்டுள்ளதாகச் சொல்வதற்குத் தேவையான ஆதாரத்தைக் கேட்டும் கொடுக்காமலேயே எதிர்த்தரப்பினர் வாதத்தை நிறைவு செய்துள்ளார்கள் என்றும்;
அரசுத் தரப்பில் 259 சாட்சிகளின் வாக்குமூலமும், புகார்கள் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் 2,341 ஆவணங்கள் தாக்கல் செய்து உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும்; நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த தீர்ப்பையே தானும் கொடுக்க வேண்டி வரும் என்றும்; கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கருத்த தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது. பொறுத்திருப்போம்; நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்! எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது!''
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications