நெல்லை மேயரிடமிருந்து பவர் பறிப்பு? நேரு நடத்திய பஞ்சாயத்து! அதிகாரம் இனி யார் கையில் தெரியுமா?
நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீதான கவுன்சிலர்கள் புகாரால் அவரிடமிருந்து பவரை மட்டும் பறிக்கும் நடவடிக்கைகளை கட்சி தலைமை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே அமளியில் ஈடுபடுவது அங்கு தொடர் கதையாக இருந்து வருகிறது. நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கும் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப்புக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

ஆரம்பத்தில் அப்துல் வஹாப்பின் ஆதரவாளராக அறியப்பட்ட மேயர் சரவணன் ஒரு கட்டத்தில் தனித்து செயல்படத் தொடங்கியதோடு சில முடிவுகளை தன்னிச்சையாகவும் எடுக்கத் தொடங்கினார். இதனால் மாவட்டச் செயலாளரின் ஆதரவு கவுன்சிலர்கள் மேயர் சரவணனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர். மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக மேயரை மாற்றக்கோரி தொடர்ந்து குடைச்சல் கொடுத்து ஆரம்பித்தனர்.
மேயரை மாற்றினால் அது தேவையற்ற சர்ச்சைக்கும், விவாதத்துக்கு வழி வகை செய்யும் என்பதால் மேயரை மாற்றாமல் அவரிடமுள்ள அதிகாரத்தை மட்டும் தற்காலிகமாக பறிப்பது என முடிவெடுத்த அமைச்சர் நேரு இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லையில் வைத்து பஞ்சாயத்து நடத்தினார். மேயர் மீது தானே உங்களுக்கு கோபம், விடுங்க பார்த்துக்கலாம் இனி என்ன தேவை என்றாலும் மாநகராட்சி ஆணையரை பாருங்க என கவுன்சிலர்களிடம் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார் அமைச்சர் நேரு.

இதன் மூலம் இனி மேயரை சந்தித்து கவுன்சிலர்கள் கோரிக்கை வைக்க வேண்டியதில்லை என்ற சூழல் நெல்லை மாநகராட்சியில் உருவாகியுள்ளது. இனி எல்லாமே மாநகராட்சி ஆணையர் தான் என்ற நிலை நெல்லையில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அண்ணா அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்டு நெல்லை மேயர் சரவணனிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் தனியார் சிமெண்ட் ஆலை கெஸ்ட் ஹவுஸில் வைத்து செப்டம்பர் மாதம் முதல் வாரம் பஞ்சாயத்து நடத்தினார்.
நெல்லை மேயர் சரவணன் திமுக இளைஞரணியில் மாவட்ட பொறுப்பில் உள்ளதால், தனக்கு எதிராக நடக்கும் கோஷ்டி அரசியலை பற்றி உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications