ஜெயலலிதாவிடம் பாராட்டும், பரிசும் பெற்ற இந்த டிடிஆரும் தேச விரோதியா...?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பாராட்டும், பரிசும் பெற்ற ஒரு ரயில்வே டிடிஆரும் போலீஸ் தடியடியில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: சென்னை போலீஸாரின் தடியடிக்கும், தாக்குதலுக்கும் சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் டிடிஆராகப் பணியாற்றி வரும் பிரேமானந்தன் என்பவரும் தப்பவில்லை. போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் சிக்கி இவர் காயமடைந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது தாயார் கண்ணீருடன் கூறுகிறார்.
என்ன விசேஷம் என்றால் இவர் சில வருடங்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவிடம் பாராட்டும், பரிசும் பெற்றவர். அவரிடமிருந்து வாழ்த்து பெற்றவர். விளையாட்டில் சிறந்து விளங்கியமைக்காக ஜெயலலிதாவிடம் இவர் பாராட்டு பெற்றார்.
விளையாட்டில் பல பதக்கங்களைக் குவித்துள்ளார் பிரேமானந்தன். இதற்காகவே இவருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. வேளச்சேரி மாடி ரயில் நிலையத்தில் டிடிஆராகப் பணியாற்றி வருகிறார்.
மெரீனா போராட்டம்
சம்பவத்தன்று அதாவது மெரீனா போராட்டத்தை முடிப்பதற்காக போலீஸார் பலப்பிரயோகத்தில் ஈடுபட்ட நாளன்று மின்சார ரயில் போக்குவரத்து சென்னையில் நிறுத்தப்பட்டது. மாடி ரயில்களும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து பிரேமானந்தன் வீடு திரும்ப முடிவு செய்து கிளம்பினார்.
மாட்டாங்குப்பம் பிரேமானந்தன்
இவரது வீடு மாட்டாங்குப்பம் பகுதியில் உள்ளது. பைக்கில் வீடு திரும்பிய அவர் தனது தெருவில் போலீஸார் சரமாரியாக தடியடி நடத்துவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் மோட்டார் சைக்கிள்களை போலீஸார் அடித்து நொறுக்கியதைப் பார்த்த அவர் தனது வாகனத்தை சற்று பாதுகாப்பான இடத்தில் வைக்க முயற்சித்தார்.
நீச்சலில் பரிசு பெற்றவர்
ஆனால் அதற்குள் அங்கு வந்த போலீஸார் பிரேமானந்தனைத் தாக்க ஆரம்பித்ததாக கூறுகிறார் அவரது தாயார். இதுகுறித்து அவர் கூறுகையில், தீவிரவாதி, சமூகவிரோதின்னு சொல்லி அடிச்சாங்க. அவனோட சின்ன வயசுல இருந்து இந்தியாவுக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் நீச்சல் போட்டியில விளையாடி பதக்கம் வாங்கித் தந்திருக்கான். அவன் சமூக விரோதியா?
ஜெ.விடம் பாராட்டு பெற்றவர்
முதல்வராக இருந்த ஜெயலலிதா கிட்ட நீச்சல் போட்டியில் பல சாதனை படைத்ததற்காக பாராட்டுப் பெற்றவன், பரிசுகளும் கொடுத்துக் கெளரவிச்சாங்க. அவனா தீவிரவாதி. அரசு ஊழியரான எனது மகனை கண்மூடித்தனமா அடிச்சாங்க போலீஸார். இப்போது காயத்துடன் அவனை புழல் சிறையில் வச்சிருக்காங்க என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார் அவரது தாயார்.