தினகரன் எங்களை கூப்பிடலையே.. கிண்டலடிக்கும் ஓபிஎஸ்!
ஆகஸ்ட் 5ஆம் தேதி தலைமை கழகத்திற்கு வருமாறு தினகரன் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆகஸ்ட் 5ஆம் தேதி தலைமை கழகத்திற்கு வருமாறு டிடிவி தினகரன் தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணைந்துவிடும் என ஈபிஎஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்காக கதவு திறந்தே இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனும் இரு அணிகளும் இணைய வேண்டும் கட்சிப் பலப்பட வேண்டும் என்று கூறினார். அதற்காகவே ஆகஸ்ட் 5ஆம் தேதி கட்சி நிர்வாகிகளை தலைமை கழகத்திற்கு அழைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகஸ்ட் 5ஆம் தேதி தலைமை கழகத்திற்கு வருமாறு டிடிவி தினகரன் தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும் அணிகள் இணைப்பு குறித்து அமைச்சர்கள் யாரும் தன்னை அழைக்கவில்லை என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார். தங்களுக்கு அழைப்பு விடுக்காமல் எப்படி கட்சியை இணைக்கப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினகரன், சசிகலா என மன்னார்குடி குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கினால் தான் பேச்சுவார்த்தை என ஆரம்பத்தில் இருந்து கூறி வந்த ஓபிஎஸ் தற்போது தினகரன் தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கிண்டலாக கூறியுள்ளார்.