உதயகுமார், ராஜன் செல்லப்பாவை நீக்க டிடிவி தினகரனுக்கு அதிகாரம் இல்லை: நிர்வாகிகள் கொதிப்பு
அமைச்சர் ஆர்பி உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பாவை நீக்க, டிடிவி தினகரனுக்கு அதிகாரமில்லை என்று மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.
மதுரை: அமைச்சர் ஆர்பி உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பாவை நீக்க, டிடிவி தினகரனுக்கு அதிகாரமில்லை என்று மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலூர் தினகரன் கூட்டத்தில் இவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பதால் இந்த நடவடிக்கை என்று அதிமுகவினர் கூறினர்.
மேலூர் தினகரன் நடத்திய கூட்டத்தில், அவர் பேசும்போது, ' எம்.எல்.ஏ.க்களை கூட்டத்தில் பங்கேற்க விடாமல் கடத்தி வைத்துள்ளனர்' எனக் குற்றம் சாட்டினார். மேலும், ' எம்.எல்.ஏ.க்களை ஒளித்து வைத்திருப்பவர்களை மக்கள் ஒழித்து விடுவார்கள்' என்று பகிரங்கமாக எச்சரிக்கையும் விடுத்தார்.
அதே கூட்டத்தில் பேசிய கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி, ' அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தான், எம்.எல்.ஏ.க்களை கடத்தி வைத்துள்ளார்' என்று நேரடியாகவே புகார் கூறினார். இது அப்போதே அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி அணிகள் திடீரென இணைந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த தினகரன், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில், கட்சியில் தன் மீதான அதிருப்தியாளர்களை நீக்குவதென முடிவும் செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து, அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வும் நீக்கப்படுவதாக இன்று டிடிவி தினகரன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு மதுரை அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய அ.தி.மு.கவினர் கூறுகையில், " ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் தினகரன். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைத் தினகரன் கட்சியில் சேர்க்கப்படவில்லை.
தற்போது பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதைத் தேர்தல் கமிஷனும் அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில் அவரால் நியமிக்கப்பட்ட துணை பொதுச் செயலாளர் பதவியில் எப்படி நீடிக்க முடியும்.?
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோருக்குப் பதவி கொடுத்தவர் ஜெயலலிதா. அவர் கொடுத்த பதவியைத் தினகரன் எப்படிப் பறிக்க முடியும். அவர்களை நீக்கத் தினகரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று தெரிவித்தனர் கொந்தளிப்பாக.