ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை நீக்க தினகரனுக்கு ஏது அதிகாரம்? கொதிக்கும் சேலம் எம்.எல்.ஏக்கள்!
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை நீக்க தினகரனுக்கு அதிகாரம் கிடையாது என்று சேலம் மாவட்ட அஇஅதிமுக எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அஇஅதிமுக( அம்மா) அணி துணை பொதுச் செயலாளர். டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள சேலம் மாவட்ட எம்.எல்.ஏக்கள்,' ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை நீக்க தினகரனுக்கு அதிகாரம் கிடையாது' என கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, சேலம் மாவட்ட எம்.எல்.ஏக்கள் வெங்கடாசலம், சக்திவேல் ஆகியோர் இன்று அளித்துள்ள பேட்டியில், " தினகரன் ஏற்கெனவே ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்.
தற்போது அ.இ. தி.மு.க.வில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள். அதனால் தினகரனுக்கு அ.இ. தி.மு.க.வில் இருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை. தினமும் விளையாட்டு போல அவர் எதை, எதையோ செய்து வருகிறார்.
தினகரனை கட்சியினர் ஏற்காத நிலையில் அவர் புதிதாக நியமிக்கும் நிர்வாகிகளை எப்படி ஏற்க முடியும். சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதில் கட்சியினர் அனைவரும் ஒரே முடிவில் உள்ளோம்.
அப்படி, அவரை நீக்கும் போது அவரால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன் பதவி எப்படி செல்லும். தினகரன் ஆதரவாளர்கள் யாரும் சேலத்தில் இல்லாத நிலையில் அவர் எப்படி கட்சியை நடத்துவார்." என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.