படத்திற்கு பிரச்னை வந்ததுமே வெளிநாடு போகிறேன் என்றவர் கமல்... தினகரன் கேலி!
விஸ்வரூபம் படத்திற்கு பிரச்னை என்றதுமே நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று சொன்னவர் கமல் என்று டிடிவி. தினகரன் கேலி செய்துள்ளார்.
சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு பிரச்னை என்றதுமே நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று சொன்னவர் கமல் என்று டிடிவி. தினகரன் கூறியுள்ளார். ஜெயலலிதாவை புறக்கணிக்கும் கமலை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை ஆர் கே நகரில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ டிடிவி. தினகரன் பேசியதாவது : ஜெயலலிதா விஸ்வரூபம் படத்திற்கு பிரச்னை வந்த போது மக்களின் கோபத்தை தனித்து படத்தை வெளியிட உதவி செய்தவர்.
ஒரு படத்திற்கு வந்த எதிர்ப்பையே தாங்கிக் கொள்ள முடியாத கமல்ஹாசன் நாட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று சொன்னார், அவர் தான் இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் கட்சி அதிமுக, அந்த கட்சியை எதிர்த்து அரசியல் செய்வேன் என்று கமல் சொல்வது ஒரு காழ்ப்புணர்ச்சியைத் தான் காட்டுகிறது.
ஜெ. மீது கோபம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசை எதிர்க்கிறேன் என்று சொன்னால் அதற்கான காரணம் வேறு, ஜெயலலிதாவின் கட்சியை எதிர்க்கிறேன் என்று சொன்னார் என்றால் அது அவருடைய காழ்ப்புணர்ச்சியையும், ஜெ மீது கமலுக்கு இருந்த கோபத்தையும் தான் காட்டுகிறது.
கமலை மக்கள் புறக்கணிப்பார்கள்
கமல் என்ன பேசினாலும் இறுதியில் மக்கள் முன்பு தான் போய் நிற்க வேண்டும். ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்பவரை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்.
கமல் தமிழ்
கமல் என்ன பேசினார் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு ஆற்றல் இல்லை நான் ஒரு சராசரி மனிதர். எனக்கு அவர் பேசும் தமிழ் எல்லாம் புரியவேயில்லை.
மக்கள் முடிவு செய்வார்கள்
கமல் காகிதப்பூவா, பிளாஸ்டிக்கு பூவா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். மக்கள் தான் இறுதி எஜமானர்கள். கமல் ஒரு நடிகர் என்பதால் அவரை பார்க்க மக்கள் கூடி இருப்பார்கள், மக்கள் கூட்டம் கூடினால் உடனே அவருக்கு வெற்றி கிடைக்கும என்று சொல்லிவிட முடியாது என்றும் தினகரன் பேசினார்.