"சின்னம்மா"வை சந்திக்க பெங்களூரு சிறைக்கு வந்த அக்காள் மகன் தினகரன்!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். அவருடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் சென்றார்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க இன்று டிடிவி தினகரன் சென்றுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தினகரன் பெங்களூரு சென்றுள்ளார். அவருடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் சென்றிருந்தார்.
சசிகலா முதல்வராக பதவியேற்க இருந்த நிலையில் ஓபிஎஸ் எழுப்பிய கலகக்குரலால் அவரால் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவர் சிறை செல்லும் முன்பாக தனது ஆதரவு பெற்ற அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்று நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றுள்ளார். இன்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். 5 முக்கிய அறிவிப்புகளுக்கு கையெழுத்திட்டுள்ளார். சிறையில் உள்ள சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூர் சிறைக்கு டி.டி.வி தினகரன் சென்றார்.
சிறை அதிகாரிகளின் அனுமதி பெற்று சசிகலாவை சந்தித்த அவர் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரனுடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் சென்றிருந்தார்.
அதோடு வழக்கறிஞர்களும் பெங்களூரு சென்றுள்ளனர். சசிகலாவிற்கு சிறையில் முதல்வகுப்பு அறை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.