ஐடி ரெய்டு அரசியல் சதி... ஜெ.,வை பார்க்காத மோடி கருணாநிதி சந்தித்தது ஏன்? - தினகரன்
ஜெயலலிதா உடல்நலம் குன்றியிருந்த போது அவரை பார்க்க வராத பிரதமர் மோடி, கருணாநிதியை மட்டும் சந்தித்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் டிடிவி தினகரன்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவின் நண்பர் என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை பார்க்க வரவில்லையே என்று தினகரன் கூறியுள்ளார். அதே நேரத்தில் கருணாநிதியை மட்டுமே அவர் சந்தித்து சென்றது ஏன் என்றும் தினகரன் கேட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது. இந்த ரெய்டு நடந்த போது விவேக் மட்டுமே ஓடிவந்தார். தினகரன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார்.
இது அரசியல் சதி என்று உடனே செய்தியாளர்களிடம் பேசினார் டிடிவி தினகரன், ஒபிஎஸ், ஈபிஎஸ் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார் தினகரன். இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், இது போன்ற அச்சுறுத்தலுக்கு எல்லாம் அஞ்சப்போவதில்லை என்றும் கூறினார்.
நண்பர் வீட்டில் சோதனை
பிரதமர் மோடி, அருண் ஜெட்லி ஆகியோர் எப்போதுமே ஜெயலலிதாவை நண்பர்கள் என்று கூறுவார்கள். அந்த நண்பரின் வீட்டிலேயே வருமான வரி சோதனை நடந்துள்ளது. இது அவர்கள் இருவருக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஜெயலலிதாவை பார்க்கலையே
கடந்த உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை பார்க்க மோடி வரவேயில்லை ஏன்? அதைப்பற்றி நாங்கள் எதுவுமே கேட்கவில்லை. அதேநேரத்தில் சில நாட்களுக்கு முன்பு கருணாநிதியை வந்து சந்தித்தார், அதையும் நாங்கள் அரசியலாக்கவில்லை.
அழிக்க நினைக்கிறார்கள்
எங்கள் குடும்பத்தினரை அரசியலில் இருந்தே அழிக்க நினைக்கிறார்கள். இது எங்களுக்கு எதிராக பின்னப்பட்ட சதி வலை. எங்களை அழிக்க நினைப்பவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
மக்கள் நல்லவர்கள் பக்கம்
ஒரு இயக்கத்தை அழித்து விட்டு வளர நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். மக்கள் நல்லவர்கள் பக்கமே இருப்பார்கள். நரசிம்மராவ் இப்படித்தான் செய்தார். இன்றைக்கு அவர் இருந்த இடமே தெரியவில்லை.
யார் யார் பெயர் இருந்தது?
ஜெயலலிதா வீட்டில் தங்கம், வைரம் என எதுவுமே இல்லை. பழைய லேப்டாப், பென்டிரைவ் எடுத்து சென்றுள்ளனர். சேகர் ரெட்டி வீட்டில்தான் தங்கமும், வைரமும் இருந்தது. அவரது டைரியில் இருந்தவர்களின் பெயர்களை படித்து பார்த்தவர்கள் அங்கேதான் சோதனை நடத்தியிருக்க வேண்டும் என்றும் கூறினார் தினகரன்.