அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வெல்லமண்டி நடராஜன் கட்சிப் பதவிகளையும் பறித்தார் தினகரன்
அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அமைச்சர் தங்கமணி மற்றும் அமைச்சர் வேலுமணியின் கட்சிப்பதவியையும் பறித்துள்ளார்.
சென்னை: அமைச்சர் தங்கமணி, அதிமுக அம்மா அணி நாமக்கல் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதே போல கோவை புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நீக்கப்படுவதாகவும், அவருக்கு பதில் புதிய மாவட்ட செயலாளராக சுகுமார் நியமிக்கப்படுவதாகவும் தினகரன் அறிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் தினமும் ஒவ்வொரு முக்கிய பிரமுகராக நீக்கி வருகிறார். இதன்மூலம் அவருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் இடையில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்று, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையே நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்தார். அவருக்குப் பதிலாக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் தங்கமணியை நீக்கம் செய்துள்ளார் தினகரன். தங்கமணிக்கு பதிலாக எஸ். அன்பழகன் நாமக்கல் மாவட்ட செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து எஸ்.பி.வேலுமணி நீக்கப்படுவதாகவும், அவருக்கு பதில் புதிய மாவட்ட செயலாளராக சுகுமார் நியமிக்கப்படுவதாகவும் தினகரன் அறிவித்துள்ளார். மேலும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வெல்லமண்டி நடராஜன் நீக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக எஸ்.ஜி. சுப்ரமணியனை நியமித்து தினகரன் உத்தரவிட்டுள்ளார்.