ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்: டி.டி.வி தினகரன் ஆவேசம்
ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் அரசியலில் இருந்தே காணாமல் போவார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.
திருச்சி : ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவருக்கும் இனி அரசியலில் இடம் இல்லை அவர்கள் காணாமல் போவார்கள் என்று அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்து உள்ளார்.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று திருச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் தினகரன். அப்போது சின்னம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
கட்சியின் உண்மைத் தொண்டர்கள் எங்கள் பக்கமே இருக்கிறார்கள். ஆட்சியைக் கையில் வைத்துக்கொண்டு வெற்றுக்கூச்சல் போட்டுவரும் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவருக்கும் இனி அரசியலில் இடம் இல்லை. துரோக அரசியல் செய்யும் இருவரும் விரைவில் வருங்கால அரசியலில் இருந்தே காணாமல் போவார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பன்னீரிடம் இருப்பது சிறிய கூட்டமே. அதை விட சிறிய கூட்டமே எடப்பாடியிடம் இருக்கிறது. அவர்கள் இருவரும் இணைவதால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எம்.ஜி.ஆருக்கும் இது போல சிக்கல் ஏற்பட்ட போது உண்மைத் தொண்டர்கள் தான் அவர் பக்கம் இருந்தார்கள். எங்களிடம் இருப்பது உண்மைத் தொண்டர்கள் அதனால் நாங்கள் கவலைப்பட போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.