பலத்தை நிரூபிக்க பகீரத பிரயத்னம்... 50 எம்எல்ஏக்களுக்கு தினகரன் குறி- எடப்பாடி கோஷ்டி அலறல்!
சென்னை: அதிமுகவின் அதிகாரப் போட்டியின் உச்சமாக தினகரன் 50 எம்.எல்.ஏக்களை வளைத்துப் போடுவதில் படுதீவிரமாக இருக்கிறாராம். தினகரன் தரப்புடன் கை கோர்த்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இந்த வளைத்துப் போடும் படலம் அரங்கேறுகிறதாம்.
அதிமுக எம்.எல்.ஏக்களில் பலரும் முதல்வர் எடப்பாடி அரசின் மீது கோபத்தில் உள்ளனர். சிபாரிசு, பொதுப்பணித்துறை ஒப்பந்தம், அரசு வேலை என அமைச்சர்களை சந்திக்கச் சென்றால் உரிய மரியாதை கிடைப்பதில்லையாம்.
கூவத்தூரில் உறுதியளித்தபடி, உள்ளூர் பணிகளுக்கு உரிய கமிஷனும் வேலைகளும் கிடைக்கவில்லை. இதைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம், தினகரன் வரட்டும். பார்த்துக் கொள்ளலாம் என அமைச்சர்கள் பதில் கொடுத்தனர். அரசுப் பணிகளில் கிடைக்கும் பணத்தை அமைச்சர்களே எடுத்துக் கொண்டனர். கார்டனில் சசிகலா இருந்திருந்தால் அவருக்கும் ஒரு பங்கு போயிருக்கும். சிறையில் இருந்து தினகரன் வந்துவிட்டதால், அவருக்கு எந்தப் பங்கும் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் அவரை ஒதுக்கி வைக்கின்றனராம்.

அமைச்சர் பதவிக்காக..
கூவத்தூர் முகாமிலேயே, ஓபிஎஸ்-ன் நிதி அமைச்சர் பதவியை தங்க.தமிழ்ச்செல்வன் எதிர்பார்த்தார். யாருக்கு எந்த துறை? என சசிகலா முடிவு செய்ததை எடப்பாடி நிறைவேற்றவில்லை. அதனால்தான், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர்.

ஆட்சி கவிழாது
இதனை எடப்பாடி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னுடைய ஆட்சியைக் கவிழ்த்தால், இன்னொரு தேர்தலை இவர்கள் சந்திக்க விரும்ப மாட்டார்கள் என நினைத்தார். நிலைமை வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது.

அனுதாபம் வந்துவிட்டது
திகார் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, தன் மீது மக்கள் மத்தியில் அனுதாபம் வந்துவிட்டதாகக் கருதுகிறார் தினகரன். ஆட்சிக்கு எச்சரிக்கை கொடுக்கும்விதமாகவே எம்.எல்.ஏக்களை சந்தித்து வருகிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை வளைக்க இருக்கிறதாம் தினகரன் கோஷ்டி.

உச்சகட்ட ஆடுபுலி ஆட்டம்
தினகரன் கோஷ்டியில் ஐக்கியமானால் எப்படியும் அமைச்சராகிவிடலாம் என்ற நப்பாசையில் பலரும் தாவ தயாராகி வருகிறார்களாம். அதிமுகவில் இன்னொரு ஆடு புலி ஆட்டம் உச்சகட்டமாக நடந்தேறி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications