ஜெ. நீக்கிய 'சதிகாரர்கள்' டிடிவி தினகரன், வெங்கடேஷை திடீரென அதிமுகவில் சேர்த்த சசிகலா!
சென்னை: ஜெயலலிதாவால் துரோகிகள், சதிகாரர்கள் என முத்திரை குத்தப்பட்டு கட்சியில் இருந்து துரத்தப்பட்ட தம்முடைய உறவினர்களான டிடிவி தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக சேர்த்துள்ளதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா அறிவித்துள்ளார். அத்துடன் டிடிவி தினகரனை அதிமுக துணைப் பொதுச்செயலராகவும் அறிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார் சசிகலா.
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு சசிகலா, அவரது கணவர் நடராஜன், தினகரன், வெங்கடேஷ் உள்ளிட்ட மன்னார்குடி கும்பலையே ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இருந்து துரத்திவிட்டார் ஜெயலலிதா. தமக்கும் தம்முடைய ஆட்சிக்கும் எதிராக சதித் திட்டம் தீட்டிய துரோகிகள், சதிகாரர்கள் என மன்னார்குடி கும்பலை அதிமுக தொண்டர்களுக்கு அடையாளம் காட்டினார் ஜெயலலிதா.
ஆனால் அதன் பின்னர் சில மாதங்களிலேயே சசிகலா மட்டும் ஒரு மன்னிப்பு கடிதம் கொடுத்து ஜெயலலிதாவுடன் இணைந்து கொண்டார். அந்த மன்னிப்பு கடிதத்தில் தமக்கு ஒருபோதும் அரசியல் ஆசையே இருந்தது இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

வெறித்தனமான முயற்சி
இருப்பினும் ஜெயலலிதா மறைந்த உடனேயே அதிமுகவை கைப்பற்றி முதல்வர் நாற்காலியையும் கபளீகரம் செய்ய சசிகலா வெறித்தனமாக முயற்சித்ததை நாடே பார்த்தது. அத்துடன் ஒட்டுமொத்த மன்னார்குடி கும்பலையும் சசிகலா மீண்டும் தம்முடன் இணைத்துக் கொண்டார்.

ஆளுநர் மாளிகையில் தினகரன்
ஜெயலலிதாவால் துரோகிகள், சதிகாரர்கள் என முத்திரை குத்தப்பட்ட கும்பலைச் சேர்ந்த டிடிவி தினகரனுடன்தான் ஆளுநர் மாளிகைக்கு சென்று சசிகலாவும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதேபோல் நேற்று எடப்பாடி பழனிச்சாமியும் டிடிவி தினகரனுடன் சென்றே ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

4 ஆண்டு சிறை
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனின் 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. இருந்தபோதும் அதிமுக மன்னார்குடி கும்பலின் பிடியில்தான் இருக்க வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருந்தார்.

தினகரன், வெங்கடேஷ் மீண்டும் சேர்ப்பு
இதனால் தற்போது ஜெயலலிதாவால் துரோகிகள், சதிகாரர்கள் என முத்திரை குத்தப்பட்டு துரத்தப்பட்ட தன்னுடைய உறவினர்களான டிடிவி தினகரனையும் வெங்கடேஷையும் மீண்டும் அதிமுகவில் சேர்த்துள்ளார் சசிகலா. இது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆரில் அறிவிப்பாக வெளியாகி உள்ளது.

துணை பொதுச்செயலர்
அதில் தங்களது செயலுக்கு இருவரும் வருத்தம் தெரிவித்ததால் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே டிடிவி தினகரனுக்கு துணைப் பொதுச்செயலர் பதவி வழங்கியுள்ளார் சசிகலா. இது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications