எடப்பாடி சாமியானால் கோயிலில் இருக்கும் சாமிகள் என்ன ஆவது?... புகழேந்தி கேள்வி!
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாட்டின் சாமி என்று செய்தி ஒளிபரப்புத்துறை வெளியிட்ட விளம்பரத்தை பார்த்து மக்கள் கிண்டல் செய்வதாக டிடிவி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாட்டின் சாமி என்று செய்தி ஒளிபரப்புத்துறை வெளியிட்ட விளம்பரத்தை பார்த்து மக்கள் கிண்டல் செய்வதாக டிடிவி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். எடப்பாடி சாமியானால் கோயிலில் இருக்கும் சாமிகள் என்ன ஆவது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிடிவி.தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எல்லோரும் ஒன்றாக இருக்கும் நேரத்திலும் கூட ஏதாவது ஒரு அமைச்சர் மீது குறை என்றால் அமைச்சர் தங்கமணியிடம் தான் போய் சொல்லுவோம், அவர் கேட்பதாகச் சொல்வார். நேற்று அவர் செய்த காரியம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த அணியும், தலைவரும், இயக்கமும் இந்த அளவிற்கு வளர்ந்து தமிழகத்தில் நிற்பதற்கு முதன்முதலில் தனித்து நின்று போராடியவன் என்ற முறையில் என்னைசாரும் என்பதில் பெரும் மகிழ்ச்சி உள்ளது. டிடிவி. தினகரன் சிறையில் இருந்து வெளிவரும் போது ஒரு 10 பேருடன் நான் விமான நிலையத்திற்கு சென்றிருந்தேன்.
தங்கமணி சொன்ன உண்மை
நேற்று மிகப்பெரிய மகிழ்ச்சி ஒரு உண்மையை தங்கமணி அவருக்குத் தெரியாமலே சொல்லிவிட்டார். ஆட்சி அமைத்து முதல்வர் பொறுப்பை டிடிவி. தினகரனுக்கு கிடைக்கவிடாமல் சதி செய்து பறிக்க செந்தில் பாலாஜி திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக டெல்லியில் இருக்கும் அதிகாரிகளிடம் எல்லாம் பேசி விட்டதாக கூறுகிறார். என்னை பொறுத்தவரை தங்கமணிக்கு நன்றி முதல்வர் பதவி எங்களுக்கு வருகிறது என்பது உங்களுக்கு தெரிந்துவிட்டது, ஆனவே செந்தில்பாலாஜி முதல்வரா யார் முதல்வர் என்பதை பொதுச்செயலாளர் முடிவு செய்வார். ஆனால் வருங்கால முதல்வர் டிடிவி. தினகரன் என்று ஒப்புகொண்டதற்கு நன்றி, செந்தில் பாலாஜி முதல்வர் பதவிக்கு வரமாட்டார் அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இவர்களுக்குள்ளான போட்டி பொறாமையில் அப்படி சொன்னாலும் தங்கமணி சொன்னதில் ஒன்று மட்டும் உண்மை.
மக்களின் சாமியாகிவிட்டார் எடப்பாடி
கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று சொல்லி இருந்தேன், நான் சொல்லும் வரை அமைதியாக இருந்தார்கள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும். அவர்களின் பெயரைக் கூட சொல்ல முடியாது. ஏனெனில் இவர்கள் சாமியாகிவிட்டார்கள், தமிழ்நாட்டு மக்கள் வணங்கும் சாமியாகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
வழக்கு போட திட்டம்
செய்தி ஒளிபரப்புத் துறையில் இந்த மாதிரிரயான கேவலமெல்லாம் நடக்கிறது. யார் வீட்டு காசில் யார் யாரை சாமி என்பது ஹைகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு போடலாம் என்று கூட இருக்கிறேன். எந்தத் தலைவரும் செய்யாத ஒரு செயலை தமிழ்நாடு செய்தி ஒளிபரப்புத் துறை செய்திருக்கிறது. தியேட்டரில் மக்கள் இந்த விளம்பரத்தை பார்த்து காரி உமிழ்கின்றனர். சாமி என்றால் எடப்பாடி பழனிசாமி என்று சொன்னால் அப்போ சாமிக்கெல்லாம் என்ன மரியாதை. ஒருவர் பூதமாகிவிட்டார் மற்றொருவர் சாமியாகிவிட்டார். இரட்டை இலை சின்னத்திற்காக டெல்லி வரை சென்று போராடியுள்ளேன், ஆனால் கிடைப்பது போல தெரியவில்லை. இரட்டை இலை சின்னம் இல்லாமல் நாங்கள் கர்நாடகாவில் போட்டியிடமாட்டோம்.
கருத்து வேறுபாடில்லை
எம்.ஆர்.நடராஜன் மறைவுக்குப் பிறகு டிடிவி. தினகரன், திவாகரன் இருவரையும் பார்த்தேன், இருவரும் நன்றாகத் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகும் கூட வெவ்வேறு நிகழ்ச்சிகளில் இருவரையும் பார்த்தேன், இருவரிடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை எனக்கு.
கருத்து வேறுபாடு எதையும் நான் உணரவில்லை, ஏன் வெற்றிவேல் இப்படி ஒரு கருத்தை கூறினார் என்று தெரியவில்லை அதில் எனக்கு உடன்பாடு இல்லை. வெற்றிவேல் இப்படி சொல்லி இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் சொந்தக்காரர்கள், அவர்களின் பிரச்னையை அவர்கள் பேசித் தீர்த்துக்கொள்ளட்டும் என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.