தூத்துக்குடி: மாநகராட்சி அதிமுக மண்டல தலைவர் வெட்டிக் கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாநகராட்சி மண்டல தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அண்ணா நகர் 5 வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகத் தேவர் மகன் வெள்ளப்பாண்டி . இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் 37 வது வார்டு கவுன்சிலராகவும், மாநகராட்சி மண்டல தலைவராகவும் இருந்து வந்தார். அ.தி.மு.க. பிரமுகரான இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தாராம்.
இந்நிலையில் வெள்ளப்பாண்டி இன்று மாலை அவரது அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினார்களாம். இதில் வெள்ளப்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஏற்கனவே வெள்ளப்பாண்டி மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளது. இதனால், முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனின் தீவிர ஆதரவாளரான செயல்பட்டு வந்த வெள்ளப்பாண்டி சமீப காலமாக சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.