தூத்துக்குடியில் சுனாமி நினைவலைகள்... கடலில் பால் ஊற்றி மக்கள் வழிபாடு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடல்தாயை மலர்தூவி வழிபட்டதுடன், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுமத்ரா தீவில் கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக கடலில் சுனாமி ஏற்பட்டது. இந்தியா, இலங்கை, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுனாமியின் கோரத்தாண்டவத்தால் பலஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் சுனாமியால் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. இந்த சுனாமி தாக்குதலில் ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். பேரலையான சுனாமி அழிவு ஏற்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் அதனுடைய பாதிப்புகள் இன்றளவும் கடற்கரை கிராமங்களில் தொடர்கிறது.

சுனாமி பேரலையின் கொடிய தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடியில் கடற்கரைப்பகுதியான திரேஸ்புரம், மாதவன் காலனியில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள், பொதுமக்கள், சின்னச்சிறு குழந்தைகள் உள்ளிட்டவர்கள் கடல் தாய்க்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர்.
சுனாமி தாக்குதலில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் கடலில் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications