ஸ்டெர்லைட்டை மூடினால் மட்டுமே எஞ்சிய உடல்களை போஸ்ட் மார்டம் செய்யவிடுவோம்- ஆட்சியருக்கு நிபந்தனை
ஸ்டெர்லைட் மூடினால் மட்டுமே எஞ்சிய உடல்களை பிரேத பரிசோதனை செய்ய சம்மதிப்போம் என்று ஆட்சியருக்கு பொதுமக்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் மூடினால் மட்டுமே எஞ்சிய 6 உடல்களை பிரேத பரிசோதனை செய்ய சம்மதிப்போம் என்று ஆட்சியருக்கு பொதுமக்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த 3 மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளை எட்டியது.
அன்றைய தினம் ஆட்சியர் வெங்கடேஷிடம் மனு கொடுக்க மக்கள் பேரணியாக புறப்பட்டனர். அப்போது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது.
புதிய ஆட்சியர்
இதையடுத்து ஆட்சியர் வெங்கடேஷ், மாவட்ட எஸ்பி மகேந்திரன் ஆகியோர் இடமாற்றப்பட்டனர். வெங்கடேஷுக்கு பதில் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார்.
மீனவர்கள் சந்திப்பு
இதனிடையே 13 பேரில் 7 பேரது உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பாதிக்கப்பட்ட மக்கள், மீனவர்கள், மக்கள் ஆகியோரை சந்தித்தார்.
ஆட்சியர் பதில்
அப்போது ஸ்டெர்லைட்டை மூடுவதாக அரசாணை பிறப்பித்தால்தான் எஞ்சிய 6 உடல்களை பிரேத பரிசோதனை செய்ய சம்மதிப்போம் என்றனர். அதற்கு அந்த கோரிக்கையை முதல்வரிடம் தெரிவிப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி பதில் அளித்தார்.
நடவடிக்கை
முதல்வர் உத்தரவின் படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் தெரிவித்தார்.