தூத்துக்குடி மாணவி புனிதா பலாத்கார வழக்கு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றம்!: பெற்றோர் அதிருப்தி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பள்ளி மாணவி புனிதா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு, மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிளாக்குளத்தைச் சேர்ந்த மாணவி புனிதா, தினமும் ரயிலில் சென்று நாசரேத் அருகில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற புனிதா, மறுநாள் தாதன்குளம் அருகே உள்ள முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்து புனிதா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மணியாச்சி அருகே உள்ள பாறைகுட்டத்தை சேர்ந்த சுப்பையா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு பிரிவு மற்றும் கொலை வழக்கு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் நடந்து முடிந்த சில நாட்களிலேயே இச்சம்பவமும் நடந்ததால், இது தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனையடுத்து மாணவி புனிதா பலாத்கார வழக்கு, தூத்துக்குடி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 17.05.2013 முதல் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் செப்டம்பர் 23ம் தேதி முதல் இந்த வழக்கில் முக்கிய சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு அடுத்த மாதம் இறுதிக்குள்ளாக தீர்ப்பு வந்துவிடும் என்று மாணவியின் பெற்றோர், உறவினர், சமூக அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரிடம் எதிர்ப்பார்ப்பு இருந்தது.
ஆனால், தற்பொழுது புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி கமலாவதி, நவம்பர் 6ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இந்த நீதிமன்றத்துக்கு இதுவரை அரசு தரப்பு வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை. அதனால் இன்னும் தீர்ப்பு காலதாமதமாகும் என்பதால் மக்கள் மற்றும் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் கிடைத்த தீர்ப்பைப் போன்று, இந்த வழக்கிலும் விரைவாக நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications